அண்ணா பல்கலை மாணவி வழக்கு; விசாரிக்க 3 பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகள்; ரூ. 25 லட்சம் இழப்பீடு: ஐகோர்ட் அதிரடி உத்தரவு

அண்ணா பல்கலை.மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இடைக்கால நிவாரணமாக ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்கவும், இந்த வழக்கை விசாரிக்க 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் குழுவை அமைத்தும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அண்ணா பல்கலை.மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இடைக்கால நிவாரணமாக ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்கவும், இந்த வழக்கை விசாரிக்க 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் குழுவை அமைத்தும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Madras High Court Justice D Bharatha Chakravarthy question caste name in govt managing institution Tamil News

அண்ணா பல்கலை.மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை விசாரிக்க அண்ணாநகர் துணை ஆணையர் சினேகபிரியா தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 21 ஆம் தேதி என்ஜினீயரிங் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

Advertisment

இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர், சொந்த ஊர் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே, பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவியின் விவரங்கள் அடங்கிய முதல் தகவல் அறிக்கை வெளியானது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்தது.

இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.லட்சுமிநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நடைபெற்றது. இந்த வழக்கு தொடர்பாக உள்துறை முதன்மை செயலாளர், டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர், பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர் ஆகியோர் விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு இடைக்கால நிவாரணமாக ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது. மேலும், மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது.

Advertisment
Advertisements

அண்ணாநகர் துணை ஆணையர் சினேகபிரியா தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆவடி துணை ஆணையர் ஜமால், சேலம் துணை ஆணையர் பிருந்தா உள்ளிட்டோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர். 

இந்த வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம்  பிறப்பித்த உத்தரவில், "மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் புகார் அளித்த மாணவியின் துணிச்சல் பாராட்டத்தக்கது. பெண்ணின் விருப்பத்தில் தலையிட யாருக்கும் அதிகாரம் இல்லை. ஒரு பெண் தன் விருப்பப்படி ஏன் காதல் செய்யக்கூடாது? இரவில் ஏன் தனியாக செல்லக்கூடாது?

ஒவ்வொரு ஆணும், பெண்ணுக்கு எப்படி மரியாதை கொடுக்க வேண்டும் என்பதை கற்றுக்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவியின் தனிப்பட்ட தகவல்கள் வெளியானது ஏற்றுக்கொள்ள முடியாதது, துரதிர்ஷ்டமானது. பாதிக்கப்பட்ட மாணவியின் படிப்பு முடியும்வரை அவரிடம் எந்த கட்டணமும் வசூலிக்கக்கூடாது.

மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தை விசாரிக்க 3 பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு இடைக்கால நிவாரணமாக மாநில அரசு 25 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். முதல் தகவல் அறிக்கை பொதுவெளியில் கசிந்ததால் மாநில அரசு இழப்பீடு வழங்க வேண்டும். எதிர்காலத்தில் முதல் தகவல் அறிக்கை விவரங்கள் வெளியே கசியாமல் அரசு உறுதி செய்ய வேண்டும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.  

 

Chennai High Court Madras High Court

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: