கள்ளக்குறிச்சியில் மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 49-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இறப்புகளின் எண்ணிக்கையும் மணிக்கு மணி அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
கள்ளச்சாராயம் அருந்தியதில் 165 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 30 கவலைக்கிடமாக இருப்பதாகவும், கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் மருத்துவமனைக்கு வர வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட பலருக்கு வெண்டிலெட்டரில் சிக்கி அளிக்கப்பட்டுகிறது. ஐ.சி.யூ-வில் வைத்து 24 மணிநேரமும் கண்காணிப்பு நடந்து வருகிறது என்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். சாராயம் அருந்தி பாதிக்கப்பட்டவர்கள் தற்போது கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், ஜிப்மர் ஆகிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், கள்ளச்சாராயம் தொடர்பான வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டு சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஐ.ஜி அன்பு தலைமையிலான போலீஸ் அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்தச் சம்பவத்தில் சி.பி.ஐ விசாரணை வேண்டும் என அ.தி.மு.க சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அ.தி.மு.க சட்டத்துறை செயலாளர் இன்பதுரை மற்றும் வழக்கறிஞர் டி.செல்வம் ஆகியோர் இந்த வழக்கை தொடர்ந்தனர். அந்த மனுவில், இறந்தவர்கள் உடலுக்கு நேர்மையாக பிரேதப் பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும், கள்ளச்சாராய மரணம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
கேள்வி
இந்த மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், இன்று வெள்ளிக்கிழமை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் குமரேஷ் பாபு ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, "ஓராண்டில் கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? கள்ளச்சாராய விற்பனையால் நடந்துள்ள இந்த சம்பவம் மிகப் பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழகத்தில் எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதை நீதிமன்றம் அறிய விரும்புகிறது.
இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாக நாளிதழிலும் யூடியூப் மூலமாக தெரிந்து கொன்டேன். கள்ளச்சாராய விற்பனையை தடுக்காத அதிகாரிகள் மீது ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை? விழுப்புரம், மரக்காணம் சம்பவங்களுக்குப் பின் கள்ளச்சாராய விற்பனையை தடுப்பது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?" என்று நீதிபதிகள் சரமாரியான கேள்விகளை எழுப்பினர்.
இதையடுத்து, விழுப்புரம், மரக்காணம் சம்பவங்களுக்கு பிறகு விஷச் சாரய விற்பனையை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கின் விசாரணை புதன்கிழமைக்கு (ஜூன் 26) ஒத்திவைக்கப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“