/tamil-ie/media/media_files/uploads/2021/04/Madras-HC-5.jpg)
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.
இதை எதிர்த்து, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிப் பேனர்ஜி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர், "கோவில்களில் பின்பற்றப்படும் ஆகம விதிப்படியான நடைமுறைகளை மாற்ற முடியாது. மத விவகாரங்களில் அரசு தலையிட முடியாது. சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்யாவிட்டால் கோவில்களின் புனிதத்தன்மை அழிக்கப்படும்" என்று வாதிட்டார்.
மனுதாரரின் கூற்றுப்படி, "பெரும்பாலான கோவில்கள் ஆகம கொள்கைகளின்படி அமைக்கப்பட்டன மற்றும் சமஸ்கிருதத்தில் மந்திரங்களை உச்சரிப்பது பழங்கால பாரம்பரியம். சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்யாவிட்டால் மந்திரங்களின் புனிதத்தன்மை அழிக்கப்படும்" என்றார்.
மனுதாரரின் வாதத்தை நிராகரித்த சென்னை உயர்நீதிமன்றம், ‘அன்னை தமிழ் அர்ச்சனைத் திட்டத்தின்’ கீழ் கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் விவகாரத்தில் தலையிட மறுத்துவிட்டது.
2008 ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மேற்கோள் காட்டி, தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி மற்றும் நீதிபதி பி டி ஆதிகேசவலு ஆகியோரின் முதல் பெஞ்ச், "எந்த மொழியில் அர்ச்சனை செய்வது என்பது பக்தர்களின் விருப்பத்துக்கு உட்பட்டது. குறிப்பிட்ட மொழியில்தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என நீதிமன்றம் வற்புறுத்த முடியாது. எந்த மொழியில் பக்தர்கள் விருப்பப்பட்டு கேட்கிறார்களோ அந்த மொழியை அர்ச்சகர்கள் தேர்வு செய்து கொள்ளலாம்" என தெரிவித்தது. இந்த வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், அந்த உத்தரவில் நீதிபதிகள், ஏற்கெனவே உயர் நீதிமன்றம் பரிசீலித்து அளித்த தீர்ப்புக்கு முரணான முடிவை எடுக்க முடியாது எனவும், ஏற்கெனவே எடுக்கப்பட்ட முடிவை மறு பரிசீலனை செய்யத் தேவையில்லை எனவும், இந்த வழக்கில் எந்தத் தகுதியும் இல்லை எனவும் கூறியுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.