/indian-express-tamil/media/media_files/2025/10/03/madras-high-court-rejected-namakkal-district-secretary-sathish-kumar-bail-plea-tamil-news-2025-10-03-14-39-46.jpg)
சென்னை ஐகோர்ட் நீதிபதி செந்தில்குமார், கட்சியினர் அடாவடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நிலையில், எதுவும் தெரியாது என மனுதாரர் எப்படி தெரிவிக்கலாம் என கேள்வி எழுப்பினார்.
நாமக்கல்லில், தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய் கடந்த 27ஆம் தேதி பிரச்சாரம் மேற்கொண்டபோது தனியார் மருத்துவமனை மீது தாக்குதல் நடந்ததாகக் கூறி, த.வெ.க மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் தன்னை கைது செய்யக்கூடும் எனக் கூறி, சதீஷ்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். தாம் எந்த குற்றமும் செய்யவில்லை, அரசியல் காரணங்களுக்காகவே தனது பெயர் வழக்கில் சேர்க்கப்பட்டதாகவும், காவல்துறை விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்கத் தயாராக உள்ளதாகவும் அவர் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது காவல்துறை தரப்பில், சதீஷ்குமார் மீது மொத்தம் எட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும், சம்பவ இடத்தில் அவரது கட்சியினரின் செயலால் சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சேதம் ஏற்பட்டதாகவும், பொதுச் சொத்துக்களும் சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அந்தப் படங்களை ஆய்வு செய்த நீதிபதி செந்தில்குமார், கட்சியினர் அடாவடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நிலையில், எதுவும் தெரியாது என மனுதாரர் எப்படி தெரிவிக்கலாம் என கேள்வி எழுப்பினார். அதுமட்டுமின்றி கட்சியினரை கட்டுப்படுத்த தெரியாதா? எனவும், பொறுப்புடன் செயல்பட வேண்டாமா எனவும் சதீஷ்குமாருக்கு கேள்வி எழுப்பிய நீதிபதி அவரது முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.