நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை பெருநகர வளர்ச்சி குழும முன்னாள் உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ராவுக்கு ஒருமாதம் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மனுதாரர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொது நோக்கத்திற்காக கையகப்படுத்தப்பட்ட தங்களது நிலம், அதற்குப் பயன்படுத்தப்படாமல் அப்படியே விடப்பட்டிருந்த காரணத்தால், அதை மீண்டும் தங்களுக்கே வழங்க கோரி லலிதாம்பாள் மற்றும் விஸ்வநாதன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு செயல்படுத்தப்படவில்லை. இதைத்தொடர்ந்து, சென்னை பெருநகர வளர்ச்சி குழும முன்னாள் உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில், நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்கு ஆளான, அன்சுல் மிஸ்ராவுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) தண்டனை விபரங்கள் அறிவிக்கப்பட்டது. அதன்படி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை பெருநகர வளர்ச்சி குழும முன்னாள் உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ராவுக்கு ஒருமாதம் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தனது உத்தரவில், "நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதால், ஐ.ஏ.எஸ்., அதிகாரி அன்சுல் மிஸ்ராவுக்கு, ஒரு மாதம் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. இருப்பினும், அப்பீல் செய்வதற்கு வாய்ப்பளிக்கும் வகையில், தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
ஐ.ஏ.எஸ்., அதிகாரி அன்சுல் மிஸ்ரா தனது சம்பளத்திலிருந்து இரண்டு வயதான மனுதாரர்களுக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். இழப்பீட்டு தொகையை 3 வாரங்களில் வழங்காவிட்டால் மேலும் 10 நாள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். 30 நாட்களுக்குள் அன்சுல் மிஸ்ரா மேல்முறையீடு செய்ய விரும்பவில்லை என்றால், அவரை தண்டனை அனுபவிக்க வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு அதிகாரிகள், உயரதிகாரிகளுக்கு மட்டுமல்ல சட்டத்திற்கும் பதில் சொல்லியாக வேண்டும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.