/indian-express-tamil/media/media_files/2025/09/09/tr-baalu-2-2025-09-09-09-16-13.jpg)
டி.ஆர். பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் புதிய திருப்பம்: ரூ. 25 லட்சம் நஷ்ட ஈடு உத்தரவுக்கு ஐகோர்ட் தடை
தி.மு.க. எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான டி.ஆர். பாலுவுக்கு எதிராக 2012-ம் ஆண்டில் தனியார் பத்திரிகையில் வெளியான கட்டுரைக்காக, அவருக்கு ரூ.25 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இந்த உத்தரவை எதிர்த்து தனியார் பத்திரிகை தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் சி. சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வு திங்கள்கிழமை இந்த உத்தரவைப் பிறப்பித்தது. டி.ஆர். பாலு, 2014-ம் ஆண்டு இந்த அவதூறு வழக்கைத் தொடர்ந்தார்.
வழக்கின் பின்னணி
2012-ம் ஆண்டு மார்ச் 28 அன்று வெளியான இதழில், சேதுசமுத்திரத் திட்டம் குறித்து தனியார் பத்திரிகை ஒரு கட்டுரையை வெளியிட்டது. அதில் தனக்கு எதிராக பல குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளதாக கூறி டி.ஆர்.பாலு, பத்திரிகைக்கு ஒரு சட்ட அறிவிப்பை அனுப்பினார். அதில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். ஆனால், அதற்குப் பதிலளித்த பத்திரிகை, தாங்கள் வெளியிட்ட செய்திக்கு நியாயம் கற்பித்தது.
அதன்பிறகு, 2013-ம் ஆண்டு டிசம்பரில் அதே பத்திரிகை டி.ஆர். பாலுவுக்கு எதிராக மற்றொரு கட்டுரையை வெளியிட்டது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான டி.ஆர். பாலு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, அந்த செய்திகள் தீங்கிழைக்கும் நோக்கத்துடன் அவதூறாக எழுதப்பட்டது நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, டி.ஆர். பாலுவுக்கு ரூ. 25 லட்சம் நஷ்ட ஈடு வழங்க பத்திரிகைக்கு உத்தரவிட்டார்.
இந்த உத்தரவுக்கு எதிராகவே தற்போது தனியார் பத்திரிகை மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.