/indian-express-tamil/media/media_files/2024/10/17/osT5gGvK5Sv4OVt4ZOnr.jpg)
சென்னை புழல் சிறையில் ஆயுள் தண்டனைக் கைதியாக இருக்கும் வீரபாரதி மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி கருத்து தெரிவித்துள்ளது.
சென்னை புழல் சிறையில் ஆயுள் தண்டனைக் கைதியாக இருப்பவர் வீரபாரதி. இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், “கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறேன். நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி சிறைத்துறை டி.ஜி.பி. தலைமையிலான மாநிலக் குழுவிடம் மனு அளித்திருந்தேன். இதே போன்ற குற்றத்திற்காகத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்தவர்கள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, மாநில அளவிலான குழு முன்கூட்டியே விடுதலை செய்துள்ளது. அந்த பரிந்துரையின் அடிப்படையில் விடுதலை செய்யக் கோரியிருந்தேன். இது தொடர்பாகத் தமிழக முதல்வருக்குக் கோப்புகள் அனுப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் தலைமையிலான அமைச்சரவை அதற்கான அனுமதியை வழங்கியது. அதோடு தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்கும் அனுப்பப்பட்டது. ஆனால் ஆளுநர் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கு ஒப்புதல் வழங்காமல் நிராகரித்துவிட்டார்” என்று கூறியிருந்தார்.
ஐகோர்ட் அதிரடி கருத்து
இந்நிலையில், இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், வி. சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று வியாழக்கிழமை (அக்.17) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “பேரறிவாளன் உள்ளிட்ட வழக்குகளில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளை மேற்கோள்காட்டி, அமைச்சரவை முடிவுகளுக்கு ஆளுநர் கட்டப்பட்டவர். அதனை ஆளுநர் மீற முடியாது.
இந்த விவகாரத்தில் ஆளுநருக்குத் தனிப்பட்ட தார்மீக உரிமை இல்லை. முன் கூட்டியே விடுதலை செய்ய முடியாது என மறுக்க முடியாது. எனவே, மறுக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்கிறோம். அத்துடன் மனுதாரர் வீரபாரதிக்கு உரிய அனுமதி வழங்க வேண்டும். மனுதாரரை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரும் மனுவை மீண்டும் பரிசீலிக்க வேண்டும். அதுவரை அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்படுகிறது” என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.