Latha Rajinikanth Rent Issue Tamil News : நடிகர் ரஜினிகாந்த்தின் மனைவி லதா நடத்தும் ஆஸ்ரம் பள்ளி வளாகத்தை காலி செய்ய 2021-ம் ஆண்டு ஏப்ரல் 30 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ராகவேந்திரா கல்வி சங்க செயலாளரான லதாவின் கோரிக்கையை ஏற்று உயர்நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.
2 கோடி வாடகை பாக்கி இருந்ததால், கட்டிட உரிமையாளரின் புகாரின் பேரில், ஸ்ரீ ராகவேந்திரா கல்விச் சங்கத்தின் செயலாளரான லதா ரஜினிகாந்த் நடத்தும் கிண்டியில் உள்ள ஆஷ்ரம் மெட்ரிகுலேஷன் பள்ளிக்குக் கடந்த மாதம் சீல் வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கட்டிட உரிமையாளர் வெங்கடேஸ்வரலுவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் பள்ளியில் படிக்கும் 300 மாணவர்கள் வேளச்சேரியில் உள்ள அதே பள்ளியின் மற்றொரு கிளைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் சென்றுள்ளன.
கடந்த 2014-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வாடகை பாக்கி வழக்குத் தொடுக்கப்பட்டது. நீண்ட காலமாக இந்த வழக்கு நிலுவையிலிருந்த நிலையில், 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதி திடீரென்று பள்ளியின் கதவு இழுத்து மூடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி பள்ளி திறக்கப்பட்டுச் செயல்பட்டு வந்தது.
என்றாலும், வாடகை பிரச்சனை தீரவில்லை. கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 3-ம் தேதி இரு தரப்பிற்கும் உடன்பாடு ஏற்பட்டு இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் இடத்தை காலி செய்வது என ஸ்ரீ ராகவேந்திரா கல்வி சங்கம் ஒப்புக்கொண்டது. இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாகப் பள்ளி நிர்வாகம் உறுதியளித்தபடி இடத்தை காலி செய்ய முடியாததால், மேலும் ஒரு வருடம் அவகாசத்தை நீட்டிக்கக் கோரி சங்கத்தின் சார்பில் அதன் செயலாளர் லதா ரஜினிகாந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
நீதிபதி என். சதீஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கு, இடத்தை காலி செய்வதற்கான ஒப்பந்தத்தில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், மாத வாடகையாக 8 லட்ச ரூபாய் முறையாகச் செலுத்தி வருவதாகவும் கூறி, கால அவகாசத்தை இந்த கல்வி ஆண்டு முடியும் வரை நீட்டிக்க வேண்டுமென லதா ரஜினிகாந்த் தரப்பில் வாதிடப்பட்டது. இதன்பிறகு நீதிபதி சதீஷ்குமார் பிறப்பித்த உத்தரவில், கிண்டியில் ஆஸ்ரம் பள்ளி இயங்கி வரும் கட்டிடத்தை காலிசெய்ய ஸ்ரீ ராககவேந்திரா கல்வி சங்கத்துக்கு ஏப்ரல் 30-ம் தேதி வரை அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளார். அப்படி காலி செய்யாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும் என அதன் செயலாளர் லதா ரஜினிகாந்த்துக்கு எச்சரக்கைவிடுத்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"