/indian-express-tamil/media/media_files/ZS4bRP8aRfXYt3lov76N.jpg)
Minister Raja Kanappan
சென்னை பல்கலைக்கழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக நிதிப்பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனால் பல்கலை. கல்வி மற்றும் நிர்வாகப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் 2017 முதல் 2021-ம் ஆண்டு வரையான காலகட்டத்தில் ரூ.424 கோடி வருமானவரி நிலுவைத் தொகை கட்ட வேண்டுமெனக் கூறி பல்கலைக்கழகத்தின் 30-க்கும் மேலான வங்கிக் கணக்குகள் வருமான வரித் துறையால் முடக்கப்பட்டன. இதனால் பல்கலை.யின் செயல்பாடுகள் முடங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.
வங்கி கணக்கு முடக்கப்பட்டதால் சென்னை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு ஊதியம், ஓய்வூதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. வழக்கமாக ஒவ்வொரு மாதமும் இறுதியில் சம்பளம் வழங்கப்படும். ஆனால் நேற்று வரை அவர்களுக்கு சம்பளம் கிடைக்கவில்லை. ஓய்வூதியதாரர்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
பேராசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தால் 6 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பேராசிரியர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஒரு பிரிவு மாணவர்கள் இறங்கி உள்ளனர்.
இந்நிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில், தமிழகம் முழுவதும் உள்ள 13 பல்கலைக்கழகத்தில் நடந்தது என்ன என்பது குறித்து குழு அமைத்து ஆய்வு நடத்தப்படும்.
ஆய்வு குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும்.
முடக்கப்பட்ட வங்கி கணக்குகள் விடுவிக்கப்பட உள்ளன. சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்கள், பணியாளர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்கப்படும். சென்னை பல்கலைக்கழகத்தின் பெருமை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்கும்.
துணைவேந்தர் நியமனம் குறித்து முதலமைச்சருடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை பல்கலைக்கழகத்தின் பிரச்சனை இன்றோடு முடிந்துவிடும் என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.