அதிமுக பொதுச் செயலாளராக கே.பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு அக்கட்சியின் முதல் மாநில மாநாடு வரும் ஆகஸ்ட் மாதம் 20-ம் தேதி, மதுரையில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டுப் பணிகளை அதிமுகவினர் விறுவிறுப்பாக மேற்கொண்டுள்ளனர்.
மதுரை வளையங்குளம் பகுதியில் சுமார் 50 ஏக்கர் பரப்பில் மாநாட்டு மேடை மற்றும் பந்தல் பிரமாண்ட முறையில் அமைக்கப்பட்டு வருகின்றன.
மாநாட்டில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் தொண்டர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், அதிமுக மாநாட்டிற்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரி அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஆர்.பி.உதயகுமார் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி நாகர்ஜூன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது முன்னாள் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணன் திராகி, அ.தி.மு.க. மாநாட்டில் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்க உள்ளதால் போதிய பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இதை விசாரித்த நீதிபதி, ஆகஸ்ட் 20-ஆம் நடைபெறும் மாநாட்டில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வகையிலும், போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வகையிலும் தேவையான உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்குவதை காவல்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு உறுதிப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“