/indian-express-tamil/media/media_files/2025/06/11/YrsAFN1JU7PNvUPuk9NP.jpg)
மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கிய வழக்கில் உதவி மேலாளர் உள்ளிட்ட ஐவர் மீது வழக்குப் பதிவு ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் கடந்த 9 ஆம் தேதி அதிகாலை, பயணிகள் ஏற்றம் தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர் கணேசனை, போக்குவரத்து கழக உதவி மேலாளர் மாரிமுத்து காலணியால் தாக்கினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து, மேலாளர் மாரிமுத்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும், தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டார். இருப்பினும், தமிழகம் முழுவதும் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, மாரிமுத்துவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.
இந்நிலையில், மேலாளர் மாரிமுத்து தாக்கியது தொடர்பாக ஓட்டுநர் கணேசன் மதுரை கரிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், மாரிமுத்துவுடன் அடையாளம் தெரியமான நான்கு பேர், தன்னிடம் அவதூறாக பேசி, காலணியால் தாக்கியதாக குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில், அரசு பணியாளரை தாக்குதல், மிரட்டல், அவதூறாக பேச்சு, காயம் விளைவித்தல் மற்றும் கூட்டமாக தாக்குதல் ஆகிய ஐந்து பிரிவுகளின் கீழ் மாரிமுத்து உள்ளிட்ட ஐந்து பேர் மீது கரிமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.