/indian-express-tamil/media/media_files/2024/11/25/gOvHZk5FHAO5QcefWpDC.jpg)
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் அமையவிருந்த டங்ஸ்டன் சுரங்க திட்டம் முழுமையாக கைவிடப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அந்த திட்டத்தை முழுமையாக ரத்துசெய்ய வலியுறுத்தி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் டங்ஸ்டன் திட்டத்தை முழுமையாக ரத்துசெய்ய பா.ஜ.க. கட்சி முயற்சிகளை மேற்கொண்டது. இதுதொடர்பாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தலைமையில் பொதுச்செயலாளர் ராம.சீனிவாசன் மற்றும் சுரங்கம் அமைய இருந்த பகுதியைச் சேர்ந்த 7 பேர் கொண்ட விவசாயிகள் குழு டெல்லியில் நேற்று புதன்கிழமை மத்திய சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை அவரது அமைச்சகத்தில் சந்தித்து பேசினார்கள்.
டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக கிராம தலைவர்கள் குழுவுடன் மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டியை சந்தித்த பிறகு அண்ணாமலை அளித்த பேட்டியில், "தமிழக மக்களுக்கு மிக மிக மகிழ்ச்சியான செய்தி அதிகாரபூர்வமாக வரும்" என்றார். முன்னதாக, ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றியது.
இந்நிலையில், மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், "மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, டெல்லியில் மதுரையைச் சேர்ந்த கிராம தலைவர்களை சந்தித்தார். கிராம தலைவர்கள் அமைச்சரிடம் நாயக்கர்பட்டி டங்ஸ்டன் கனிமவளத் தொகுதி, அரிட்டாப்பட்டி பல்லுயிர் பெருக்க வனப்பகுதி மற்றும் பல பாரம்பரிய தலங்களை கொண்டிருப்பதாக தெரிவித்தனர்.
கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி சுரங்க அமைச்சகம் வெளியிட்ட செய்தி குறிப்பில், ஏலம் அறிவிக்கப்பட்டப் பிறகு அதற்கு எதிராக சுரங்கம் அமையவிருக்கும் பகுதியில் பல்லுயிர் பெருக்க தம் அமைந்திருப்பதனால் ஏலத்துக்கு பல தரப்புகளிலிருந்து எதிர்ப்புகள் எழுந்துள்ளது குறிப்பிடப்பட்டிருந்தது.
ஜனவரி 22, 2025 அன்று நடந்த சந்திப்பில், கிராம தலைவர்கள் நாயக்கர்பட்டி தொகுதி டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்யுமாறு மத்திய அமைச்சரைக் கேட்டுக்கொண்டனர். அவர்கள் பேசியதை அமைதியாக கேட்ட மத்திய அமைச்சர், பல்லுயிர் பெருக்க பாரம்பரியத்தை பாதுகாப்பிற்கு மத்திய அரசு முழுமையாக ஆதரவளிப்பதாக தெரிவித்தார்.
விரிவான விவாதங்களுக்குப் பிறகு, இப்பகுதியில் பல்லுயிர் பெருக்க தலத்தின் முக்கியத்துவத்தையும், பாரம்பரிய உரிமைகளைப் பாதுகாப்பதில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான அரசின் அர்ப்பணிப்பையும் கருத்தில் கொண்டு, நாயக்கர்பட்டி டங்ஸ்டன் கனிமவளத் தொகுதி ஏலத்தை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது." எனக் கூறப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.