தைப்பொங்கல் திருநாளான இன்று மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க 1,100 காளைகளுக்கும், 900 வீரர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வெற்றி பெறும் சிறந்த காளைக்கு டிராக்டரும், முதலிடம் பிடிக்கு மாடுபிடி வீரருக்கு காரும் பரிசாக வழங்கப்பட உள்ளது.
முதலில் கோவில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. அதனை தொடர்ந்து வாடிவாசலில் சீறி வரும் காளைகளை போட்டி போட்டு கொண்டு வீரர்கள் மடக்கி பிடித்து வருகின்றன. ஒவ்வொரு சுற்றுகளாக காளைகள் அவித்துவிடப்படுகின்றன. ஒவ்வொரு சுற்றுக்கும் கலர் கலர் வண்ண டி-சர்ட்களை அணிந்து களத்தில் இறங்கி வருகின்றனர். ஒவ்வொரு காளை அவிழ்த்து விடும்போதும் 2 சக்கர வாகனம், தங்க காசு, வெள்ளி காசு, ரொக்க பணம், குக்கர், வேட்டி, அண்டா போன்ற பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசு பொருட்கள் அளிக்கப்படுகின்றன.
இந்நிலையில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் காளை மார்பில் குத்தியதால் மாடு பிடி வீரர் நவீன் உயிரிழந்தார். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் மாடு பிடி வீரர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.