/indian-express-tamil/media/media_files/2025/09/18/madurai-bench-of-madras-high-court-orders-fine-for-officials-who-fail-to-file-reply-tamil-news-2025-09-18-17-18-14.jpg)
மதுரை சம்பகுளம் பொதுப் பூங்காவில் சட்டவிரோத கோவில் கட்டுமானம்: பதில் மனு தாக்கல் செய்யாத அதிகாரிகளுக்கு அபராதம் விதித்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட சம்பகுளம் விரிவாக்கம், சுவாமி சிவானந்த நகர் பொதுப் பூங்காவில் தனிநபர்கள் அரசின் அனுமதி இன்றி கோவில் கட்டி வருவதாக கூறி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு மீதான விசாரணை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்றது. இந்நிலையில், புதூர் பகுதியை சேர்ந்த எஸ். நல்லதம்பி தாக்கல் செய்த மனுவில், வேலியிடப்பட்டுள்ள சுவாமி சிவானந்த நகர் பொதுப் பூங்காவில் ஏற்கனவே ஒரு கோவில் இருப்பதையும், சிலர் சாதி ஆதிக்கத்தை முன்வைத்து புதிய கோவில் கட்டுவதற்காக ஆழ்துளைக் கிணறு தோண்டி கட்டுமானம் மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதைத் தடுக்கும் பொறுப்பு அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர் மனுவில் சுட்டிக்காட்டினார். இந்த மனுவுக்கு முன்பே பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கியிருந்த போதிலும், மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்யாததை நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் குமரப்பன் அமர்வு, மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோருக்கு தலா ரூ.2,000 அபராதம் விதித்ததுடன், உடனடியாக பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இந்த வழக்கு விசாரணை வரும் 14 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.