நீர்நிலையை ஆக்கிரமித்து அரசுக் கட்டடம் எழுப்பப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் நேரில் முன்னிலையாகி விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது.
கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டம், சடையமங்கலம் கிராமத்திற்குட்பட்ட மண்குளம் பகுதியில் உள்ள நீர்நிலையை ஆக்கிரமிப்பு தடுப்பதற்காக 2022 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வு, 2023 ஆம் ஆண்டு நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டடம் எழுப்புவதற்கு தடைவிதித்து, ஏற்கெனவே கட்டப்பட்ட கட்டடங்களை அகற்றவும் உத்தரவிட்டது.
இந்நிலையில், மருங்கனூர் பேரூராட்சிக்குட்பட்ட ரவிபுதூர் கிராமத்தில், நீர்நிலையை ஆக்கிரமித்து பூங்கா மற்றும் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி கட்டப்படுவதாக புகார் எழுந்துள்ளது. நீதிமன்ற உத்தரவை மீறியதாகக் கூறி, பேரூராட்சி செயல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுதாரர் கோரிக்கை விடுத்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், பி. புகழேந்தி ஆகியோர், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரும், மருங்கனூர் பேரூராட்சி செயல் அலுவலரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.