தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் புத்தக கண்காட்சி மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள மதுரை மாநாட்டு மையத்தில் செப்டம்பர் 6-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில், மதுரை புத்தக கண்காட்சியில் அடுத்த சர்ச்சை வெடித்துள்ளது.
இந்த புத்தகக் கண்காட்சிக்கு பேச்சாளர்களும், சிறப்பு விருந்தினர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். குறிப்பாக முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு, மதுரை எம்பி சு. வெங்கடேசன், பேச்சாளர்கள் ஞானசம்பந்தன், ஐ லியோனி உள்ளிட்டோர் அழைக்கப்பட்டிருந்தனர். அந்த வரிசையில், தனியார் தொலைகாட்சியைச் சேர்ந்த நகைச்சுவை நடிகர் ராமரும் அழைக்கப்பட்டார்.
இந்நிலையில், மதுரை புத்தகக் கண்காட்சிக்கு நகைச்சுவை நடிகர் ராமர் அழைக்கப்பட்டது சர்ச்சை கிளப்பியது. புத்தகத் திருவிழா புத்தக வாசிப்பாளர்களின், புத்தக பிரியர்களின் நிகழ்வாக இருக்கக்கூடிய நிலையில், புத்தகங்கள் தொடர்பான நபர்களை அழைத்து நிகச்சிகளை நடத்த வேண்டும் என்கிற கருத்தும் நிலவியது. இதனையடுத்து, பேச்சாளர்கள் பட்டியலில் இருந்து நகைச்சுவை நடிகர் ராமர் பெயர் நீக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், மதுரை புத்தகக் கண்காட்சி பேச்சாளர்கள் பட்டியலில் இருந்து நகைச்சுவை நடிகர் ராமர் பெயர் நீக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது தற்போது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.
இதுதொடர்பாக சமூக வலைதள பக்கத்தில் வாசுகி பாஸ்கர் என்பவர் தனது பதிவில், "புத்தகத் திருவிழா நடத்தப்படும் நோக்கத்தையொட்டி அதை சிறப்பாக்கும் சரியான நபர்களை தேர்வு செய்வதில் இன்னமும் கூட அக்கறையோடு இருக்கலாம் மாற்றுக் கருத்தில்லை.
ஆனால் விஜய் டிவி ராமரை அழைத்து விட்டு விமர்சனம் வந்ததும் அவரது படத்திற்கு மேல் ஸ்டிக்கர் ஒட்டுமளவு அவர் தகுதி இல்லாத நபர் இல்லை. அவரை பட்டியலில் இருந்து நீக்கி விட்டார்களா என்று தெரியவில்லை, ஒருவேளை நீக்கியிருந்தால் அது தவறு.
ஐந்து நிமிடம் கூட புதிய தகவலையோ, செறிவான உரையோ பேச முடியாத, குடும்ப பெண்களை பற்றி பழைய பிற்போக்கு ஜோக்குகள் சொல்லும் ஸ்டீரியோ டைப்பிங் பட்டிமன்ற பேச்சாளர்கள் ஏராளமானவர்கள் காலம் காலமாய் கலந்துக் கொண்டு இருந்திருக்கிறார்கள், அவர்களுக்கு ராமர் எந்த வகையிலும் குறைச்சல் இல்லை." என்று ராமர் பெயர் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தனது முகநூல் பதிவில், ‘மதுரை புத்தகத் திருவிழாவில் பேச விஜய் டிவி ராமரை அழைத்திருக்கிறார்கள். அறிவுசார் நிகழ்வொன்றில் அவர் அவசியமில்லை என்றும், அறிவுத் தூய்மைவாதம் பேசாதீர்கள் என்றும் இருவேறு விவாதங்கள் போய் கொண்டிருக்கிறது.
இங்கு ராமர் என்பவர் வெறும் நகைச்சுவையாளர் மட்டும் அல்ல. அவர் ஒரு இரட்டை அர்த்தப் பேச்சாளர். அவர் வரும் எந்த ஒரு டிவி நிகழ்ச்சியையும் நாகரிகமாக எந்த நடத்தி முடித்தது கிடையாது. அவருடைய பேச்சுக்களை பீப் சவுண்ட் இல்லாமல் ஒலிக்கவிட்டு வெட்கமே இல்லாமல் டிவி நிறுவனங்களும் கல்லா கட்டுகின்றன. இந்த ராமர்தான், ‘காச உண்டியல்ல போடாம, உன் கு’ என்று சட்டென நிறுத்தி மலினமான கிளர்ச்சிக்கு பார்வையாளர்களை கொண்டு போய் சிரிக்க(?) வைப்பார். இதெல்லாம் அவர் பாணிக்கு கொஞ்சம் நாகரிகமானவை. ஆண், பெண் பாகுபாடு இல்லாமல் தொங்குது, ஒழுகுது, வீங்குது போன்ற அவரது சம்பாஷனைகள் எல்லாம் குடும்பமாக டி.வி-யில் பார்க்கும்போதே முகம் சுளிக்க வைப்பவை.
இப்படியான அடையாளத்தைக் கொண்ட மனிதரை புத்தகக்காட்சி போன்றதொரு நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக அனுமதிப்பது எப்படி சரியானதாக இருக்கும். அவரை அங்கீகரித்து, அவரை வைத்து சம்பாதித்த விஜய் அங்கீகரித்து, வேண்டுமானால் அவருக்கு விருது வழங்கிக் கொள்ளலாம். வெகுமக்களின் ஒரு பொதுவான நிகழ்வில் அவரை கவுரவிக்க நமக்கு என்ன இருக்கிறது.
அவரும் ஒரு எழுத்தாளர்தான் என்ற அடிப்படையில் ‘சரோஜா தேவி’ மஞ்சள் பத்திரிகை எழுத்தாளரையும் மேடை ஏற்றி பேச வைக்கலாமா..? அந்த வகையில் ராமரும் ஒரு ‘மஞ்சள் அந்த ரக நகைச்சுவையாளர்தான். மேலும் இந்த விசயத்தில் விமர்சிப்பவர்களை ஏதோ தூய்மைவாதி போல் சித்தரிக்கும் போக்கு நகைச்சுவையானது.
விஜய் டிவி ராமரை யாரும் இங்கு வெறுக்க இல்லை. அவரது பங்கேற்பை கேள்வி கேட்கவும் இல்லை. அறிவுப் பண்ணையில், இரண்டாம் தரமான பேச்சாளரான அவரது மேடைப் இரண்டாம் நம்மை விமர்சிக்க வைக்கிறது." என்று அவர் பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“