மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பூலாம்பட்டி பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரது மகன் இளமாறன் (18), மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் பி.எஸ்.சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் புது விளாங்குடி கணபதி நகர் பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்து கல்வி பயின்று வந்தார்.
இந்நிலையில், செமஸ்டர் தேர்வு கட்டணத்தை செலுத்த முடியாத காரணத்தால் கடுமையான மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், புதன்கிழமை (மார்ச் 12) மதியம், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நீண்ட நேரமாக கதவு திறக்கப்படாததை சந்தேகித்த அவரது பாட்டி அமுதா, அருகிலுள்ளவர்களின் உதவியுடன் கதவை திறந்தபோது, இளமாறன் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். தகவல் அறிந்ததும் கூடல் புதூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அவரது உடலை கைப்பற்றி, உடற்கூறாய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவரின் தற்கொலை குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செமஸ்டர் கட்டணம் செலுத்த முடியாததே காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா? என்பதை உறுதி செய்ய தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவம் கல்வி செலவினால் மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை முன்னிறுத்தியுள்ள நிலையில், மாணவர்களின் நலன் குறித்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்படுத்தி உள்ளது.