தனது அச்சகத்திற்கு அருகிலுள்ள நடிகர் சூரியின் தம்பி லட்சுமணனின் 'அம்மன் உணவகம்' பொதுப்பாதையை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்தி பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
மதுரை நரிமேடு பகுதியில் உள்ள சோனையார் கோவில் மெயின் ரோட்டில் 'அலைகள்' என்ற பெயரில் கடந்த ஏழு வருடங்களாக அச்சகம் நடத்தி வருபவர் முத்துச்சாமி (வயது 55). தற்போது, நடிகர் சூரியின் சகோதரர் லட்சுமணன் மீது கடுமையான புகார் ஒன்றை முத்துச்சாமி அளித்துள்ளார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் அவர் அளித்த மனுவில், தனது அச்சகத்திற்கு அருகிலுள்ள லட்சுமணனின் 'அம்மன் உணவகம்' பொதுப்பாதையை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்தி பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பதாகக் கூறியுள்ளார்.
இருவருக்கும் இடையே இதுவரை பல முறை வாக்குவாதம் ஏற்பட்டிருப்பதாகவும், அண்மையில் லட்சுமணன் தனது கடைக்குள் அனுமதியில்லாமல் நுழைந்து பூட்டை உடைத்து, சேமிப்பு பணம் மற்றும் முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், மாடிக்கு செல்லும் வழியை பூட்டியுள்ளதுடன், வீட்டு உரிமையாளரிடம் கூடுதல் வாடகை தருவதாக கூறி மாடியை கைப்பற்ற முயற்சித்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
“இந்தச் செயல்கள் நடிகர் சூரிக்கு தெரிந்தே நடக்கின்றனவா? அல்லது அவரது பெயரை பயன்படுத்தி அவரது சகோதரர் தனிப்பட்ட முறையில் செயல் புரிகிறாரா என்பது தெரியவில்லை,” என்றும் அவரது மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, லட்சுமணனின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முத்துச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.