மதுரை மாநகராட்சியில் ஆயிரக்கணக்கான கட்டிடங்களுக்கு வரி குறைத்து விதிக்கப்பட்டதன் காரணமாக, மாநகராட்சிக்கு சுமார் ரூ.200 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆணையர் தரப்பில் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மாநகராட்சியின் கடந்த ஆண்டு வாராந்திர ஆய்வுக் கூட்டத்தில், 100க்கும் மேற்பட்ட கட்டிடங்களுக்கு விதிகளை மீறி குறைந்த வரி வசூலிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து உதவி ஆணையர்கள் குழுவினர் விசாரணை மேற்கொண்டபோது, ரூ.1.50 கோடிக்கு மேல் வருவாய் முறைகேடு நடந்துள்ளதான தகவலும் வெளியாகியுள்ளது.
இந்த முறைகேட்டில் 13 பில் கலெக்டர்கள் தொடர்புடையவர்களாக இருப்பது தெரியவந்தது. இவர்களில் இருவர் இறந்த நிலையில், 11 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. விசாரணை முடிவில், 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். முறைகேடு தொடர்பான கணினி பதிவுகள் அழிக்கப்பட்டதாகக் கூறி, மாநகராட்சி ஆணையர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, மொத்த கணினி பதிவுகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.
மாநகராட்சியின் 3ஆம் மண்டல அலுவலகத்தில் பணியாற்றும் மண்டல தலைவர் நேர்முக உதவியாளர் தனசேகரன் மற்றும் கணினி ஆபரேட்டர் சதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வரிவிதிப்பு ஒப்புதல் பாஸ்வேர்டுகளை தவறாக பயன்படுத்தி மோசடி செய்ததாகக் கூறப்படும் சில அதிகாரிகள் மீது, மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் மேயருடன் நெருக்கமான சிலரும் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவு போலீசாரும் விசாரித்து வருவதால், மதுரை மாநகராட்சியில் பெரும் ஊழல் வெடித்து சிக்கியுள்ளது. இது மாநகராட்சியில் பணிபுரியும் அதிகாரிகள் மீதான நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.