மதுரை சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் எதிர்சேவை மற்றும் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வையொட்டி மாநகராட்சி சார்பில் 20 இடங்களில் கழிப்பிட வசதிகளும், 34 இடங்களில் மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட உள்ளன.
மதுரை வைகை ஆற்றில் நாளை காலை கள்ளழகர் ஆற்றில் இறங்குகிறார். இந்த விழாவை காண திரளும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விழாவுக்கு வரும் பக்தர்கள், கியூ.ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து, விழாவில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாம்கள், ஆம்புலன்ஸ்கள், கழிப்பறை, குடிநீர் வசதிகளை தெரிந்துகொள்ளலாம்.
இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கள்ளழகர் எதிர்சேவை மற்றும் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக, வரும் 11 மற்றும் 12-ம் தேதிகளில் மாநகராட்சி சார்பில் மாநகர் பகுதிகளில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் அதிகம் கூடும் 52 இடங்களில் குடிநீர் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. 11 இடங்களில் நிரந்தர கழிப்பிட அறைகளும், 9 இடங்களில் தற்காலிக கழிப்பிட அறைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுடன் கூடுதலாக 431 கிராமப்புற தற்காலிக பணியாளர்களும் இணைந்து தூய்மைப் பணி மேற்கொள்ளப்படுகிறது. சுவாமி வரும் சாலைகளில் 300 இடங்களில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. 34 இடங்களில் பக்தர்களுக்காக மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட உள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாநகராட்சி கடைகள் மூலம் கிடைக்கும் வருவாயில் சிறு பகுதியை சித்திரைத் திருவிழாவுக்கு செலவிடும் நோக்கில் மதுரை குன்னத்தூர் சத்திரத்தில், மாநகராட்சி சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மதுரை மாநகரில் திருவிழா நடக்கும் நடக்கும் வீதிகள், சாலைகளில் தன்னார்வ 1 அமைப்பு அமைப்புகள், தனி நபர்கள், அரசியல் கட்சியினர் சார்பில் அன்னதானம், நீர் மோர் பந்தல், பழங்கள் விநியோகம் நடைபெறும். அதனால், விழா நாட்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து விட்டு அன்னதானம் சாப்பிட்டுவிட்டு மன நிறைவோடு செல்வர்.
அந்தவகையில் மதுரை மாநகராட்சி சார்பிலும் சித்திரைத் திருவிழாவில் அன்னதானம் வழங்கப்படுகிறது. மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு குன்னத்தூர் சத்திரத்தில் மாநகராட்சி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
அதுபோல், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வை முன்னிட்டும், மாநகராட்சி இளங்கோ மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி வரும் திங்கட்கிழமை (மே 12) நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், "குன்னத்தூர் சத்திரம் மாநகராட்சி கடைகள் மூலம் கிடைக்கும் வருவாயில் சிறு பகுதியை சித்திரைத் திருவிழாவுக்கு செலவிடும் நோக்கில் அன்னதானம் வழங்கப்படுகிறது என்றனர்.