மதுரை அரசரடி பகுதியில் அமைந்துள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்த நிலையில், அவரது உடலை வழங்க மருத்துவமனை நிர்வாகம் மீதிக் கட்டணத்தைக் கோரியதால், அவரது உறவினர்கள் மருத்துவமனை வாயிலிலேயே இறுதிச்சடங்கு நடத்த முயன்றனர்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவர் இதய நோய்க்காக கடந்த புதன்கிழமை மதுரையில் உள்ள தேவகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது சிகிச்சைக்காக ரூ.4 லட்சம் கட்டணம் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. உறவினர்கள் முதற்கட்டமாக ரூ.2 லட்சம் செலுத்தியுள்ளனர்.
ஆனால், வியாழக்கிழமை காலை சிகிச்சை பலனின்றி அண்ணாதுரை திடீரென உயிரிழந்தார். அவரது மறைவு உறவினர்களுக்கு பேரிடியாக அமைந்தது. இந்த சோகமான சூழ்நிலையில், உடலை வழங்க மீதி ரூ.2 லட்சம் கட்டணத்தை செலுத்த வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் கோரியதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
மருத்துவமனை நிர்வாகத்தின் இந்தக் கோரிக்கையால் அதிர்ச்சியடைந்த அண்ணாதுரையின் உறவினர்கள், செய்வதறியாது திகைத்தனர். இறுதியாக, தங்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை உடலை வாங்கப் போவதில்லை என்றும், மருத்துவமனை வாசலிலேயே இறுதிச்சடங்கு ஏற்பாடுகளை மேற்கொள்ளப் போவதாகவும் அறிவித்தனர். அதன்படி, அவர்கள் மருத்துவமனை வாசலிலேயே இறுதிச்சடங்கிற்கான ஏற்பாடுகளைத் தொடங்கினர்.
/indian-express-tamil/media/media_files/2025/06/14/ScMSDUMtsgw7zPsxkzXk.jpeg)
மருத்துவமனை வாசலில் இறுதிச்சடங்கு நடப்பதாகக் கேள்விப்பட்ட எஸ்.எஸ். காலனி போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். நிலைமையின் தீவிரத்தைப் புரிந்துகொண்ட போலீசார், அண்ணாதுரையின் உறவினர்களுடனும், மருத்துவமனை நிர்வாகத்துடனும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
காவல்துறையின் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைக்குப் பிறகு, மருத்துவமனை நிர்வாகம் ஒரு முக்கிய முடிவை அறிவித்தது. "பாதிக்கப்பட்டவர் சிகிச்சை பெறும் நிலையிலேயே உயிரிழந்ததால், எந்தவித கட்டணமும் இன்றி உடலை வழங்கப்படும்" என மருத்துவமனை நிர்வாகம் ஒப்புக்கொண்டது.