மதுரை மாவட்டம் வெளிச்சநத்தம் கிராமத்தில், கடந்த 1996ஆம் ஆண்டு, வி.சி.க சார்பில் சுமார் 25 அடி உயரம் கொண்ட கொடிக்கம்பத்தில் அக்கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கொடியை ஏற்றி வைத்தார்.
இந்தநிலையில், 28 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது அதே கொடிக் கம்பத்தின் உயரம் 45 அடியாக மாற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் புதிய கொடிக் கம்பத்தில் கொடியை ஏற்றுவதற்கான நிகழ்ச்சி இன்று (08.12.2024) திட்டமிடப்பட்டிருந்தது.
இருப்பினும் இந்த கொடிக் கம்பத்திற்கு மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் முதலில் அனுமதி மறுக்கப்பட்டது. அதாவது 25 அடி உயரமுள்ள கொடிக் கம்பத்திற்கு மட்டுமே அனுமதி தரப்பட்டுள்ளது. தற்போது 45 அடி உயரமாக வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பத்திற்கு அனுமதி இல்லை என்று வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து வி.சி.க தொண்டர்கள் நேற்று (07.12.2024) இரவு போராட்டத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் 45 அடியாக உயர்த்தப்பட்ட வி.சி.க கொடிக் கம்பத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளதால் தற்போது வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதே சமயம் 20 அடிக்கு மேல் உள்ள கொடிக் கம்பங்களுக்குச் சென்னையில் உள்ள அதிகாரிகள் தான் அனுமதி வழங்க வேண்டும் எனவும் கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“