பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கஞ்சா வைத்திருந்த வழக்கில் ஆஜராகததால், மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்ததையடுத்து கைது செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கில் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் காவல்துறை பெண் உயர் அதிகாரிகள் குறித்து அவதூறு கருத்துக்களைத் தெரிவித்தது சர்ச்சையானது. இதனையடுத்து தேனியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தலைமறைவாக இருந்த சவுக்கு சங்கரை கடந்த மே மாதம் 4-ம் தேதி கோவை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யபட்டார். அப்போது, சவுக்கு சங்கர் பயன்படுத்திய காரில் கஞ்சா வைத்திருந்ததாகக் கூறி அவர் மீது தேனி பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணையானது மதுரை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதனிடையே, காவல்துறையில் பணி புரியும் பெண் போலீசார் குறித்து அவதூறு கருத்துக்களைத் தெரிவித்தது தொடர்பான வழக்கில் சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னர், சவுக்கு சங்கர் அண்மையில் ஜாமீனில் வெளியே வந்தார்.
அதே நேரத்தில், சவுக்கு சங்கர் மீது தொடரப்பட்ட கஞ்சா வைத்திருந்த வழக்கில் நீதிமன்றம் பலமுறை நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு தெரிவித்திருந்தது. இருப்பினும், சவுக்கு சங்கர் நேரில் ஆஜராகாமல் தவிர்த்து வந்ததாகத் தெரிகிறது. இதனால், சிறப்பு நீதிமன்றம் சவுக்கு சங்கருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து சென்னையில் தலைமறைவாக இருந்த சவுக்கு சங்கரை தேனி மாவட்ட போலீசார் கடந்த 17-ம் தேதி (17.12.2024) கைது செய்தனர். இதைத் தொடர்ந்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர், சவுக்கு சங்கர் மதுரைக்கு அழைத்துச் செல்லப்பட்டு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்நிலையில் சவுக்கு சங்கர் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், மனுவை செவ்வாய்க்கிழமை (24.12.2024) விசாரித்த நீதிபதி, யூடியூபர் சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார். அதன்படி சவுக்கு சங்கர் சென்னை வேப்பேரி காவல் நிலையத்தில் 15 நாட்கள் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.