மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் காலில் காயம் காரணமாக சிகிச்சை பெற்றுவந்த ரவுடி முருகனை, மருத்துவமனைக்குள் புகுந்து மர்மக்கும்பல் வெட்டிக்கொலை செய்துள்ள சம்பவம் பெரும்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை கரும்பாலை பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் கடந்த 5-ம் தேதி இரு சக்கர வாகனத்தில் சென்றபோது ஏற்பட்ட விபத்து காரணமாக கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் முருகனுக்கு துணையாக இருந்த அவரது மனைவி தேநீர் வாங்க வெளியே சென்றிருந்தார். அப்போது, முருகன் சிகிச்சை பெறும் சிகிச்சை அறைக்குள் புகுந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் கத்தி அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை கொண்டு முருகனை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடினர்.
முருகன் மீது கொலை சம்பவம் உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து தகவலறிந்த அரசு ராஜாஜி மருத்துவமனை காவல் நிலைய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.
கொலைச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிந்து மருத்துவமனையில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர். சமீபத்தில் நடந்த கொலைச் சம்பவத்திற்கு பழிக்குப்பழியாக முருகன் கொலை செய்யப்பட்டு இருக்கக் கூடும் என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
தென்மாவட்டங்களில் முக்கிய மருத்துவ தலமாக விளங்கும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நோயாளிகளை பார்ப்பதற்காக வரும் பொதுமக்களுக்கு பல்வேறு நேரக் கட்டுப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் உள்ள நிலையில் நுழைவாயிலில் பாதுகாவலர்களின் அனுமதியை மீறி பயங்கர ஆயுதங்களுடன் மர்ம கும்பல் சென்றுள்ளது மருத்துவமனையில் உள்ள பாதுகாப்பினை கேள்விக்குறியாக்கியுள்ளது. மருத்துவமனைகளில் இனிவரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil