மதுரையில் லஞ்சப் புகாரில் சிக்கிய மத்திய ஜிஎஸ்டி துணை ஆணையர் சரவணகுமார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரையை சேர்ந்தவர் கார்த்திக். இவர் டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வருகிறார். இவருக்கான ஜிஎஸ்டி வரி பாக்கி செலுத்துவதற்காக பிபி குளத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஜிஎஸ்டி பிரிவில் துணை ஆணையராக இருக்கும் சரவணக்குமாரை அணுகினார். அப்போது அவர், ஜிஎஸ்டி வரி பாக்கியில் குறிப்பிட்ட தொகையை குறைப்பதற்கு 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை லஞ்சமாகக் கேட்டதாக கூறப்படுகிறது.
இந்தத் தொகையை கொடுக்க விரும்பாத கார்த்திக், இது தொடர்பாக சிபிஐ அலுவலகத்தில் புகார் அளித்தார். இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் அளித்த ஆலோசனைப்படி, நேற்று இரவு பிபி குளம் அலுவலகத்தில் வைத்து ரூ.3.50 லட்சத்தை அந்த அலுவலகத்தில் பணிபுரியும் கண்காணிப்பாளர்கள் அசோக்குமார், ராஜ்பீர் ராணா ஆகியோரிடம் வழங்கியுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த சிபிஐ அதிகாரி கலைமணி, இன்ஸ்பெக்டர் சரவணன் குழுவினர் கையும் களவுமாக அவர்களை கைது செய்தனர்.
இந்த தொகை துணை ஆணையர் சரவணக்குமாருக்காக வாங்கச் சொன்னது என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மதுரை ஜிஎஸ்டி அலுவலகத்தில் கைது செய்யப்பட்ட மூன்று பேரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் கார்த்திக்கிடம் ஜிஎஸ்டி பாக்கியை குறைக்க லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜிஎஸ்டி துணை ஆணையர் சரவணக்குமார், மற்றும் கண்காணிப்பாளர்கள் அசோக்குமார், ராஜ்பீர் ராணா ஆகிய மூவரையும் கைது செய்த போலீசார், சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் துணை ஆணையர் சரவணக்குமாரின் வீடு அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் சிபிஐ டிஎஸ்பி தலைமையில் 5 பேர் வீட்டை சோதனை செய்வதற்காக காத்திருக்கின்றனர். தற்போது வரை வீடு பூட்டப்பட்டுள்ள நிலையில் வீடு திறக்கப்பட்டதும் வீட்டில் சிபிஐ சோதனை நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“