சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் பத்திரகாளியம்மன் கோய்லில் ிகாவலாளியாக பணியாற்றியவர் அஜித்குமார் (வயது 28). நகை திருட்டு வழக்கு தொடர்பாக போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக தனிப்படை போலீசார் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சூழலில் இளைஞர் மரண வழக்கில் கைதான 5 போலீசாரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி வெங்கடேஷ் பிரசாத் உத்தரவு பிறப்பித்திருந்தார். இதன்படி பிரபு, ஆனந்த், கண்ணன், ராஜா, சங்கரமணிகண்டன் ஆகியோர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த சூழலில் திருப்புவனம் இளைஞர் மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் போலீசார் என்பதால் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் திருப்புவனம் வாலிபர் மரணம் தொடர்பாக சிவகங்கை மாவட்ட எஸ்.பி. ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் ராமநாதபுரம் எஸ்.பி. சந்தீஷ் சிவகங்கை மாவட்ட எஸ்.பி. பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் திருப்புவனம் இளைஞர் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மதுரை அமர்வில் இன்று நடந்தது. தென்னந்தோப்பில் வைத்து அஜித்குமார் துன்புறுத்தப்பட்டதாகவும், உடல் எதற்காக மதுரை கொண்டுவரப்பட்டது என்பது சந்தேகத்தை எழுப்புவதாகவும் அஜித் தரப்பு வழக்கறிஞர் ஹென்றி தெரிவித்தார். அஜித் மரணமடைந்த செய்தியை அவரது தாயிடம் சிவகங்கை மாவட்ட எஸ்பி. தான் கூறியதாகவும், அஜித் குமார் தாக்கப்பட்ட போது சிவகங்கை மாவட்ட எஸ். பி ஆசிஷ் ராவத் காவல் நிலையத்தில் இருந்ததாகவும் வாதிடப்பட்டது. அப்போது, தமிழக அரசுக்கு பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் முன்வைத்தனர்.
இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தவுடன் சிவகங்கை எஸ்.பியை இடமாற்றம் செய்துள்ளீர்களே? அவரை இடைநீக்கம் செய்திருக்க வேண்டாமா? என்று நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினர். தொடர்ந்து நீதிபதிகள் கூறுகையில், "சம்பவம் நடந்த அன்று அஜித்குமாரை திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. அப்படி என்றால் அங்கிருந்தே விசாரணை தொடங்கப்பட்டிருக்க வேண்டும். ஜூன் 28-ம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், நேற்று இரவே அது ஆன்லைனில் அது பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. புகார் கொடுத்தவுடன் சி.எஸ்.ஆர். (CSR) பதிவு செய்யப்பட்டதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நகை திருட்டு புகார் கொடுக்கப்பட்ட பிறகு ஏன் போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
யாருடைய உத்தரவினால் வழக்கு தனிப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. தனிப்படையினர் யார் சொல்லி, எதன் அடிப்படையில் இந்த வழக்கை கையில் எடுத்தனர். புலனாய்வு செய்வதற்கு தான் காவல்துறை. அடிப்பதற்கு எதற்கு காவல்துறை? காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் முறையாக வேலை செய்கிறதா? கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத்தை உடனே இடமாற்றம் செய்ய என்ன காரணம்? அதிக கல்வியறிவு கொண்ட மாநிலமான தமிழகத்தில் இப்படி நடப்பது ஏற்கத் தக்கது அல்ல. நீதித்துறை நடுவர் உடனே விசாரணையை தொடங்க வேண்டும் என உத்தரவிட நேரிடும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இது முழுக்க முழுக்க சட்ட விரோதமாக நடந்த காவல் மரணமாகும். தலைமை காவலர் கண்ணன், மானாமதுரை டி.எஸ்.பி. (DSP) இன் சிறப்புப் படையைச் சேர்ந்தவர். இவர் அங்கிருந்து, திருப்புவனம் வந்து விசாரித்தது விதிமீறலாகவே பார்க்கப்பட வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், அஜித்குமார் விசாரணையின் போது தப்பித்து ஓட முயற்சித்துள்ளார் என காவல்துறை எப்போதும் போல கதை கூறுகின்றனர். அஜித்குமார் குடும்பத்திடம் 50 லட்சம் ரூபாய் பேரம் பேசப்பட்டது. சம்பவ இடத்தில் விசாரணை நடத்திய திருப்புவனம் நீதித்துறை நடுவரை காவல்துறையினர் சூழ்ந்திருந்தனர். உடற்கூராய்வு தொடங்குவதற்கு முன்பாக அஜித்தின் உடலை முழுமையாக பார்க்க தாய் மற்றும் சகோதரரை அனுமதிக்காதது ஏன்?" என சரமாரியாக கேள்விகளை எழுப்பிய மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், அஜித்குமார் காவலர்களால் அடித்துக் கொல்லப்பட்டதை மறைக்கவே இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்ததாகவும் குற்றம்சாட்டினார்.
புலனாய்வு எஸ்.பி. மாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும், இப்படியே அனைவரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்படுவார்கள் என்றும் வழக்கறிஞர் வாதிட்டார். தொடர்ந்து, ஒட்டுமொத்த காவல்துறையை நாங்கள் குறை சொல்லவில்லை என கூறிய நீதிபதிகள் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அஜித் உயிரிழப்புக்கு தமிழக அரசு முழு பொறுப்பேற்க வேண்டும் என்றும் நீதிபதிகள் திட்டவட்டமாக கூறினர். மேலும், இந்த வழக்கின் விசாரணை பிற்பகல் 2:15 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இன்று மாலை பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் மாஜிஸ்திரேட் அறிக்கையை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.மேலும், வீடியோ தாக்கல் செய்த சக்தீஸ்வரன் என்பவரையும் மாலை நேரில் ஆஜராக உத்தரவிட்டனர். காவல்துறை, நீதித்துறையை சேர்ந்தவர்களின் குடும்பத்தினர் கொலை செய்யப்பட்டாலும் இப்படித்தான் நடந்து கொள்வீர்களா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த கேள்விகளுக்கு டி.ஜி.பி. (DGP) பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இதனிடையே, சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிவகங்கை விவகாரம் குறித்து தகவல் தெரிந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பானவர்களை கைது செய்து இருக்கிறோம். இன்றைக்கு கூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.