பழங்கால சின்னங்களை அல்ல, கல்லறைகளைப் பாதுகாக்கவே தொல்லியல் துறை உள்ளது போல தெரிகிறது; கோயில்களைப் பாதுகாப்பது தொல்லியல் துறையின் கடமை என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை இடித்துரைத்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சின்ராஜ் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தஞ்சை பெருவுடையார் கோயில் கி.பி 1010-ல் கட்டப்பட்டது. இந்த கோயில் அண்ட அமைப்பை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. ராஜராஜன் திருவாசல் என அழைக்கப்படும் கிழக்கு நுழைவு கோபுரத்தின் அடிப்பகுதி அகலமானது. இங்கு இந்திரனுக்கு துணை சன்னதி மேற்கு முகத்தின் வலது புறத்தின் கீழ் மட்டத்தில் அமைந்துள்ளது.
மன்னன் ராஜ ராஜ சோழனும், மக்களும் இந்திரனை வணங்கி காலை, மாலை என பூஜை செய்து விழாவைக் கொண்டாடி உள்ளனர். ஆனால், தஞ்சை பெருவுடையார் கோவிலில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திரன் சன்னதி பூட்டி உள்ளது. பூஜை, வழிபாடு நடத்தப்படாமல் உள்ளதால், பராமரிப்பு இல்லாமல் உள்ளது. எனவே இந்திரன் சன்னதியை திறந்து பராமரித்து தினமும் காலை, மாலை வேளைகளில் ஆராதனை செய்து வழிபட தேவையான நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.
இந்த மனு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 1) விசாரணைக்கு வந்தது. அப்போது, பழமை வாய்ந்த கோவில்களை பாதுகாப்பதில் ஒன்றிய தொல்லியல் துறை போதிய அக்கறை காட்டுவதில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
“பழங்கால நினைவுச் சின்னங்களை அல்ல, கல்லறைகளைப் பாதுகாக்கவே தொல்லியல் துறை உள்ளது போல் தெரிகிறது; கோயில்களைப் பாதுகாப்பது தொல்லியல் துறையின் கடமை” என்று நீதிபதிகள் தொல்லியல் துறையை இடித்துரைத்தனர்.
மேலும், “பிரகதீஸ்வரர் கோயில் அரியலூரில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையில் உள்ளது. பிரகதீஸ்வரர் கோவில் அருகிலேயே தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. 20 மீட்டர் தொலைவில் தேசிய நெடுஞ்சாலைக்கு தொல்லியல்துறை அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், வருங்காலங்களில் தஞ்சை பெரிய கோயிலின் நிலை என்னவாகும் என்று யோசிக்கவில்லை. தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் பாதிக்கக் கூடிய நிலை ஏற்பட்டு உள்ளது. கல்லறைகளை பாதுகாக்கவே ஒன்றிய தொல்லியல் துறை உள்ளதாக தெரிகிறது” என நீதிபதிகள் கூறினர். அதுமட்டுமில்லாமல், கோவில்களை வருமானம் பார்க்கும் இடமாகவே அரசு பயன்படுத்தி வருவதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
இந்த வழக்கில், மத்திய அரசின் தொல்லியல் துறை, மாநில அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“