பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரம் தொடர்பான வழக்கை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என சி.பி.சி.ஐ.டி.க்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பணியாற்றி வந்தவர் கணக்கு பேராசிரியை நிர்மலா தேவி. இவர் கல்லூரி மாணவிகளைத் தவறான பாதையில் அழைத்துச் செல்ல முயன்று தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இந்த உரையாடல் சமூக வலைத்தளம் முழுவது பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து நிர்மலா தேவியை அருப்புக்கோட்டை காவல்துறையினர் கைது செய்தனர். நிர்மலாவின் இரண்டு தொலைப்பேசிகளையும் ஆய்வு செய்ததில், சில முக்கிய பிரமுகர்களில் தொடர்பு எண் உள்ளதென்றும், அவர்களிடம் நிர்மலா உரையாடியுள்ளார் என்றும் தெரிய வந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், இந்த வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றினார்கள்.
விசாரணையின் போது, இவர் அளித்த தகவலின் பேரில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். 3 பேரும் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான வழக்கையும் சி.பி.சி.ஐ.டி. விசாரித்து வருகிறது.
கைது செய்யப்பட்டவர்களில் கருப்பசாமி தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவரது மனு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், நிர்மலா தேவி விவகாரத்தில் மாணவிகள் சம்பந்தப்பட்டிருப்பதால் யாருக்கும் ஜாமீன் வழங்க முடியாது என திட்டவட்டமாக கூறிவிட்டது.
மேலும், 'இவ்வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி., செப்டம்பர் 10-ம் தேதிக்குள் இறுதியான குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும். செப்டம்டபர் 9-ம் தேதியில் இருந்து 6 மாத காலத்திற்குள் மாவட்ட நீதிமன்றம் வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும். அதுவரை யாருக்கும் ஜாமீன் வழங்கக்கூடாது' என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.