மதுரை தனக்கன்குளத்தைச் சேர்ந்த காளீஸ்வரன் எனப்படும் கிளாமர் காளி கடந்த மார்ச் 22ஆம் தேதி இரவு இருசக்கர வாகனங்களில் வந்த நால்வர் கொண்ட கும்பலால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொலைச் சம்பவத்தில் வெள்ளை காளி என அழைக்கப்படும் பிரபல ரவுடிக்கு முன்விரோதம் காரணமாக தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. தற்போது புழல் சிறையில் இருக்கும் வெள்ளை காளியின் உத்தரவின் பேரில்தான் இந்த கொலை நடந்ததா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் ஏற்கனவே ஜெயக்கொடி, கார்த்திக் உட்பட ஏழு பேர் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், வெள்ளை காளியின் கூட்டாளியான ரவுடி சுபாஷ் சந்திரபோஸ் சமீபத்தில் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இதனிடையே, வெள்ளை காளியின் சகோதரி சத்தியஜோதி, தனது சகோதரருக்கு என்கவுண்டர் செய்யப்படலாம் என்ற அச்சம் காரணமாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “விசாரணை காணொளி மூலம் நடத்தப்பட வேண்டும். மேலும், அந்த விசாரணையின் பதிவை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்” என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த வழக்கு இன்று நீதிபதி தனபால் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, சமீபகாலமாக என்கவுண்டர்கள் அதிகரித்து வருவதாக கவலை தெரிவித்தார். காவல்துறையினர் சட்டத்தை கையில் எடுத்துக் கொள்வதாகவும், குற்றவாளிகளை சுட்டுப் பிடிக்கலாம் என்றாலும் அவர்களை காலில் மட்டுமே சுட வேண்டும் என்றும் கண்டித்தார். மேலும், காவல்துறையினருக்கு துப்பாக்கி வழங்கப்படுவது அவர்களின் பாதுகாப்புக்காக மட்டுமே என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில், சமீபத்தில் இரண்டு காவலர்களை ரவுடிகள் கொலை செய்துள்ளதாகவும், அதில் ஒருவர் எரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கின் விசாரணையை ஏப்ரல் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். இந்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.