/indian-express-tamil/media/media_files/2025/10/03/madurai-high-court-slams-tvk-party-and-tn-govt-for-karur-stampede-tamil-news-2025-10-03-13-38-33.jpg)
கரூர் கூட்டநெரிசல் வழக்கில் தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் இணைப் பொதுச்செயலாளர் நிர்மல்குமார் ஆகியோரின் முன் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
கரூரில் த.வெ.க தலைவர் விஜய் பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் 41 பேர் மரணமடைந்த விவகாரம் தொடர்பான, த.வெ.க பொதுச்செயலாளர் ஆனந்த், இணைபொதுச்செயலாளர் நிர்மல்குமாரின் முன் ஜாமீன் மனுக்களை சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு விசாரித்தது. மதுரை ஐகோர்ட் நீதிபதி ஜோதிராமன் இந்த மனுக்களை விசாரித்தார்.
அப்போது, நாமக்கல் விவகாரத்தில் ஒருவரின் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது என அரசு தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது. இதற்கு ஆனந்த் தரப்பில், கூட்டத்தின் ஏற்பாட்டாளர் மாவட்ட செயலாளர் மதியழகன்தான். அவர் கைது செய்யப்பட்டுள்ளார். எங்கள் தொண்டர்களை கொல்ல வேண்டிய அவசியம் இல்லை. வேண்டுமென்றே தாமதமாக வந்தது போல் கூறப்படுகிறது. போலீஸ் மீது பழி போடவில்லை. எப்.ஐ.ஆர்-இல் தவறான தகவல் உள்ளது. வேலுச்சாமிபுரத்தில் அனுமதி கோரிய போது காவல்துறை மறுத்திருக்கலாம். கூட்டத்திற்குள் ரவுடிகள் புகுந்துவிட்டனர். கூட்டம் நிற்கும் இடத்தில் ஏன் லத்தி சார்ஜ் நடத்த வேண்டும். சட்டம்-ஒழுங்கை ஒழுங்குப்படுத்துவது காவல்துறையின் கடமை. கரூரில் நடந்தது திட்டமிட்ட செயல் அல்ல, விபத்து என வாதம் முன் வைக்கப்பட்டது.
எந்தவித சாட்சிகளும் ஆவணங்களும் இல்லாமல் குற்றம் சுமத்துவதை ஏற்கமுடியாது. கூட்டம் அதிகமாக இருந்ததால், கூட்டத்தை ரத்து செய்ய காவல்துறையிடம் மதியழகன் தெரிவித்திருக்கலாம். கரூரில் சம்பவம் நடந்தவுடன் த.வெ.க.,வினர் தப்பி ஓடிவிட்டனர். காத்திருந்தவர்களுக்கு தவெக சார்பில் குடிநீர் வழங்கப்படவில்லை. பெரும்பாலானவர்கள் நீர்ச்சத்து குறைபாடு காரணமாகவே உயிரிழந்துள்ளதாக உடற்கூராய்வில் தெரியவந்துள்ளது. தலைமறைவாவது ஏற்கத்தக்கது அல்ல. விசாரணை செய்தால் மட்டுமே உண்மை தெரியவரும். விசாரணை தொடக்க நிலையில் உள்ளதால் முன் ஜாமீன் வழங்கினால் விசாரணை செய்வது கடினம். இவர்களின் பொறுப்பற்ற தன்மையால் 41 பேர் உயிரிழந்துள்ளனர். முன் ஜாமின் வழங்கக்கூடாது என ஆனந்த் மற்றும் நிர்மல்குமார் மீதான முன் ஜாமீன் மனு விசாரணையில் தமிழ்நாடு அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதத்தை கேட்டறிந்த நீதிபதி ஆனந்த் மற்றும் நிர்மல் குமாரின் முன் ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பை நீதிபதி ஜோதிராமன் ஒத்தி வைத்தார்.
இந்தநிலையில், கரூர் கூட்டநெரிசல் வழக்கில் 2 ஆம் குற்றவாளியாக ஆனந்த், 3 ஆம் குற்றவாளியாக நிர்மல் குமார் சேர்க்கப்பட்டுள்ளனர். கரூரில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நீதிமன்றத்தை தொந்தரவு செய்கிறது. மூத்த ஐ.பி.எஸ் அதிகாரியை கொண்டு சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. விசாரணை தொடக்க நிலையிலேயே உள்ளது. ஆகவே முன் ஜாமீன் தர இயலாது. த.வெ.க பொதுச்செயலாளர் ஆனந்த், இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமாரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிடுகிறேன் என நீதிபதி ஜோதிராமன் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.