New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/12/Madurai-High-Court-1.jpg)
தனியார் தொண்டு நிறுவனங்கள், ஆசிரியர்கள் என அனைவருக்கும் சங்கங்கள் இருக்கும் நிலையில் காவல் துறையினருக்கு மட்டும் ஏன் சங்கங்கள் இல்லை? இது ஜனநாயகத்திற்கு எதிரானது இல்லையா? – மதுரை ஐகோர்ட் நீதிபதி கேள்வி
காவலர்களுக்கு வார விடுமுறை வழங்க வேண்டும் என்ற அரசாணையை உயர் அதிகாரிகள் ஏன் நடைமுறைப்படுத்தவில்லை என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
காவலர்களுக்கு வார விடுமுறை வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், முறையாக விடுமுறை வழங்கப்படுவதில்லை என காவலர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இதுதொடர்பாக மதுரை ஆஸ்டின்பட்டி பகுதியைச் சேர்ந்த காவலர் செந்தில்குமார் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது:
"தமிழக காவல் துறையில் பணிபுரிபவர்கள் மிகுந்த பணிச்சுமையை எதிர்கொண்டு வருகின்றனர். பெரும்பாலான காவலர்களுக்கு ஓய்வின்றி பணியாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இதனையடுத்து 2021-ஆம் ஆண்டு, காவலர்கள் முதல் உதவி ஆய்வாளர்கள் வரை உள்ள பணியாளர்களுக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை வழங்க அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், அந்த அரசாணை நடைமுறைப் படுத்தப்படாமல் உள்ளது.
எனவே, அந்த அரசாணையை முறையாக அமல்படுத்தி, காவலர்களுக்கு வார விடுமுறை வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.” இவ்வாறு செந்தில்குமார் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த மனு நீதிபதி பட்டு தேவானந்த் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசாணை ஏன் முறையாக அமல்படுத்தப்படவில்லை என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும், ஒரு லட்சத்து 20 ஆயிரம் காவலர்கள் இருக்கும் நிலையில், ஒருவர் மட்டும் மனு தாக்கல் செய்திருப்பது பாராட்டத்தக்கது. மற்ற காவலர்கள் ஏன் மௌனமாக இருக்கிறார்கள்? இது மேலதிகாரிகளின் மீதான அச்சமா? இது வியப்பாக உள்ளது. ஜனநாயகம் மற்றும் மனித உரிமை அனைவருக்கும் தானே என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
"கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் காவலர்களுக்கு சங்கம் உள்ளது. ஆனால் இங்கு மட்டும் போலீசாருக்கு இது வரை சங்கம் இல்லாதது ஏன்?. தனியார் தொண்டு நிறுவனங்கள், ஆசிரியர்கள் என அனைவருக்கும் சங்கங்கள் இருக்கும் நிலையில் காவல் துறையினருக்கு மட்டும் ஏன் சங்கங்கள் இல்லை? இது ஜனநாயகத்திற்கு எதிரானது இல்லையா? முதல்வரின் உத்தரவுகளையும் அரசு அதிகாரிகள் மதிப்பதில்லையா? 2021இல் பிறப்பிக்கப்பட்ட அரசாணை இன்னமும் நடைமுறைப் படுத்தப்படவில்லை எனில் அந்த அரசாணையும் விளம்பர நோக்கத்திற்காக பிறப்பிக்கப்பட்டது எனக் கூற இயலுமா? காவலர்களுக்கு வார விடுமுறை வழங்க வேண்டும் என்ற அரசாணையை உயர் அதிகாரிகள் ஏன் நடைமுறைப்படுத்தவில்லை என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
மேலும், காவலர்களுக்கு வார விடுமுறை வழங்க வேண்டும் என்ற அரசாணை எந்த வகையில் பின்பற்றப்படுகிறது என்பது குறித்து தமிழக டிஜிபி பதில் மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.