/indian-express-tamil/media/media_files/2025/08/19/madurai-high-court-2025-08-19-07-26-40.jpg)
த.வெ.க. மாநாட்டு விபத்து சம்பவம்: சட்டவிரோத பிளக்ஸ், பேனர்களை அகற்ற ஐகோர்ட் கிளை உத்தரவு
தமிழகம் முழுவதும் சாலையோரங்களில் உள்ள கொடிக்கம்பங்கள், விளம்பர பலகைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும், அரசியல் கட்சியினருக்கும் சென்னை உயா்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, பல்வேறு மாவட்டங்களிலும் நெடுஞ்சாலைத் துறையினர் கொடிக்கம்பங்களை அகற்றும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், நாகையைச் சேர்ந்த அருளரசன் என்பவர் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்கள் மற்றும் பிளக்ஸ் பதாகைகளை அகற்ற உத்தரவிடக் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், மதுரை த.வெ.க மாநாட்டுத்திடலில் இன்று 100 அடி கொடிக்கம்பம் சாய்ந்து விபத்து ஏற்பட்டதை எடுத்துரைத்தார்.
இதைக் கேட்ட நீதிபதிகள், "மதுரை விமான நிலையத்திலிருந்து நாங்கள் வந்துகொண்டிருந்தபோது, ரிங் ரோடு பகுதியில் சட்டவிரோதமாக, அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருந்த பேனர்களைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தோம். தற்போது காற்று பலமாக வீசுகிறது. ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் என்ன செய்வது?" எனத் தெரிவித்தனர். இதன் அடிப்படையில், தமிழ்நாடு முழுவதும் சட்டவிரோத பேனர்களை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.
முன்னதாக, மதுரை த.வெ.க. மாநாட்டுத் திடலில் நட்ட 100 அடி உயர கொடிக் கம்பம் திடீரென சரிந்து விழுந்ததால் கட்சியினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்தச் சம்பவத்தில் ஒரு கார் சேதம் அடைந்தது. நல்வாய்ப்பாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் அங்கு சென்று சாய்ந்து விழுந்த கொடிக் கம்பத்தை அங்கிருந்து அப்புறப்படுத்த அறிவுறுத்தினர். மேலும், அப்பகுதியில் நிறுத்தி வாகனங்களும் அப்புறப்படுத்தினர்.
மேலும், விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மதுரையில் நடைபெறும் த.வெ.க. மாநாட்டுக்கு சொந்த ஊரில் பேனர் வைக்க முயன்ற கல்லூரி மாணவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். இந்நிலையில், மதுரையில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் போர்டுகள், பேனர்களை அகற்ற உயர்நீதிமன்ற கிளை உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு மணி நேரத்தில் பேனர்கள், கட் அவுட்களை அகற்றி தகவல் தெரிவிக்க மதுரை காவல் ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.