மதுரை பழங்காநத்தம், டி.வி.எஸ் நகர், ஜெய்ஹிந்த்புரம் ஆகிய பகுதிகளை இணைக்கும் ஒய் வடிவ மேம்பால பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. 2009ஆம் ஆண்டு தமிழக நெடுஞ்சாலைத் துறையின் நபார்டு மற்றும் கிராம சாலைகள் பிரிவின் கீழ் துவங்கிய இந்தப் பணிக்காக ரூ.33 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
1,082 மீட்டர் நீளத்தில் உருவாக்கப்பட்ட இப்பாலம், டி.வி.எஸ் நகர் மற்றும் ஜெய்ஹிந்த்புரத்தில் தலா 8.5 மீட்டர் அகலத்தில், பழங்காநத்தத்தில் 12 மீட்டர் அகலத்தில் 'ஒய்' வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது.
இப்போது, டி.வி.எஸ் நகர் பகுதியில் பாலம் கட்டும் பணிகள் முழுமையாக முடிந்துள்ளன.
ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் பின்தங்கிய பணிகள் கடந்த ஆண்டு மீண்டும் தொடங்கி தற்போது நிறைவடைந்துள்ளன. வர்ணம் பூசும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
நபார்டு மற்றும் கிராம சாலைகள் பிரிவின் மதுரை மண்டல கண்காணிப்பு பொறியாளர் நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இதையடுத்து, மே மாத இறுதிக்குள் மேம்பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.