மதுரை மாவட்டத்தில் இன்று (பிப் 3) மற்றும் நாளை (பிப் 4) 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்து முன்னணியினர் போராட்டம் அறிவித்துள்ள நிலையில், அசம்பாவிதங்களை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
நாளை இந்து முன்னணியினர் மற்றும் அதன் ஆதரவு அமைப்பினர் சார்பாக திருப்பரங்குன்றம் கோயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் தென்மாவட்டங்களைச் சேர்ந்த பலர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, இந்துக்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்தவர்கள் திருப்பரங்குன்றம் மலை குறித்து தங்கள் கருத்துகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதனால், அசாதாரண சூழல் உருவாகியுள்ளது.
எனவே, போராட்டம் அறிவிக்கப்பட்டதன் காரணமாக வன்முறை சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்யும் விதமாக மதுரை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், இன்று காலை 6 மணி முதல் நாளை இரவு 12 மணி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.