Madurai jallikattu Tamil News: பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரையைச் சுற்றியுள்ள அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் அரங்கேறி வருகிறது. உலகப்புகழ் பெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் சீறிப்பாயும் காளைகளை நமது மண்ணின் காளையர்கள் தாவிப்பிடித்து பரிசுகளை அள்ளி வருகின்றனர்.
பரிசுகளை அள்ளிய காளைகளும், காளையர்களும்
இந்நிலையில், நேற்று அவனியாபுரத்தில் அரங்கேறிய ஜல்லிக்கட்டு போட்டி வழக்கமான உற்சாகத்துடன் நடத்தப்பட்டது. இதில் சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் பிடித்து விதவிதமான பரிசுகளை வென்றனர். இதேபோல் வீரர்களின் பிடியில் சிக்காமல் போக்கு காட்டிய காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
ஜல்லிக்கட்டு போட்டியின் இறுதிச்சுற்று முடிவில் அவனியாபுரம் கார்த்திக் 24 காளைகளை பிடித்து முதலிடம் பெற்றார். அவர் சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு செய்யப்பட்ட நிலையில், அவருக்கு முதல்வர் ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது. 19 மாடுகளை பிடித்த முருகனுக்கு 2ம் பரிசாக, உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ சார்பில் மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டது. 12 காளைகளை பிடித்த பரத் குமாருக்கு மூன்றாம் பரிசு வழங்கப்பட்டது.
சிறந்த காளையாக மணப்பாறை தேவசகாயம் என்பவரின் காளை தேர்வு செய்யப்பட்டது. அவனியாபுரம் ராமுவின் காளை இரண்டாவது பரிசை பெற்றது.
பாலமேடு ஜல்லிக்கட்டு
இந்த நிலையில், இன்று மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் முதலாவதாக கோயில் காளை அவிழ்த்து விடப்பட்ட நிலையில், போட்டியை அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
மாலை 4 வரை நடைபெற உள்ள இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்த போட்டியில் சிறந்த மாடுபிடி வீரருக்கு காரும், சிறந்த காளைக்கு, காங்கேயம் பசுமாடும் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தங்க காசுகள், கிரைண்டர், குக்கர், கட்டில், சைக்கிள் உள்ளிட்ட பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.
அலங்காநல்லூரில் நாளை (17-ந் தேதி) ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“