மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்தால் பலத்த சேசதமடைந்த பசுபதீஸ்வரர் சன்னதியின் மேற்கூரை இடிந்து விழுந்தது.
கடந்த 2 ஆம் தேதி இரவு, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் ஆயிரங்கால் மண்டபம் பகுதிக்கு அருகில் அமைந்த கடைகளில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 5க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களும், தண்ணீர் லாரிகள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
வேகமாக பரவி தீ அனைத்து கடைகளையும் தொடர்ந்து எரித்துக் கொண்டே சென்றது. பின்பு, தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு, தீயை அணைத்தனர். இந்த விபத்தில் 36 கடைகள் எரிந்து சாம்பலாகின. இந்த தீ விபத்தினால், வீரவசந்தராயர் மண்டபத்தின் ஒரு பகுதியில் மேற்கூரை இடிந்து விழுந்தது. மண்டபமும் இடிந்து விழும் நிலையில் இருப்பதால் பாதுகாப்பு கருதி பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இருப்பினும் சுந்தரேசுவரரையும், மீனாட்சி அம்மனையும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்க வழங்கப்பட்டனர்.
இந்நிலையில் தீ விபத்தில் சேதமடைந்த பசுபதீஸ்வரர் சன்னதியின் மேற்கூரை தற்போது இடிந்து விழுந்தது. 6 அடி, 5 அடி அகலத்திற்கு இடிந்து விழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், இந்த பகுதி முழுவதும் சேதமடைந்துள்ளன. அத்துடன், மேற்கூரைக்கு அருகில் இருந்த பெரிய கற்தூண் ஒன்றும் சாய்ந்துள்ளது. இதன காரணமாக, இந்த பகுதிக்கு பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.