மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உலகப் புகழ்பெற்ற கோயிலாகும். நாள்தோறும் ஏராளமான மக்கள் சாமி தரிசனம் செய்வர். அந்தவகையில் கோயில் பணிகளுக்காக நிலம் வழங்கப்பட்டத்தில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் மூலவர்களான அம்மன் மற்றும் சுவாமிக்கு அர்த்தஜாம பூஜையின் போது ருத்ர ஜெப ஊழியம் செய்யப்படும்.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இந்த பூஜைக்கு தயிர் வழங்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் கடந்த 55 ஆண்டுகளுக்கு முன்பு தட்சணாமூர்த்தி அய்யர் மற்றும் முக்கோனார் என்பவருக்கு மதுரை மாவட்டம் சக்குடி அருகே 2 ஏக்கர் நன்செய் நிலமானது கோயில் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது.
ஆனால் தட்சணாமூர்த்தி அய்யர் மற்றும் முக்கோனார் ஆகிய இருவரும் முறையாக ஊழியம் செய்வதை தொடராமல், அவர்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தை வேறொரு நபருக்கு விற்றது தெரியவந்தது. இதுதொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. கோயிலின் பெயரிலேயே பட்டா மாற்றம் செய்து தர வேண்டும் என கோயில் நிர்வாகம் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் அந்த நிலம் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலம் என உறுதி செய்யப்பட்ட நிலையில் மீனாட்சி அம்மன் கோயில் பெயரில் பட்டா மாற்றம் செய்யப்பட்டு துணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் தலைமையில் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் மீட்கப்பட்ட இடத்தில் கோயில் நிர்வாகம் சார்பில் 'மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான இடம்' என்று பெயர் பலகையும் வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil