Advertisment

சி.பி.எஸ்.இ நியமனத் தேர்வு; இந்தி பேசாத மாநிலங்களின் தேர்வர்களுக்கு மீண்டும் அநீதி; சு.வெங்கடேசன் எதிர்ப்பு

உத்தரப்பிரதேசம், பீகார் ஆகிய வட மாநிலங்களில் கடந்த 10 ஆண்டுகளில் நான்கு வழிச்சாலைகளுக்கு ஒதுக்கப்பட்ட முதலீடுகளில் 5ல் ஒரு பங்கு தான் மத்திய அரசால் தமிழகத்திற்கு செய்யப்பட்டுள்ளது; கோவையில் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் பேட்டி

author-image
WebDesk
New Update
Su Venkatesan

மதுரை எம்.பி சு.வெங்கடேசன்

ராமர் பிறந்த அயோத்தியிலும், வனவாசம் சென்ற சித்ர கூடத்திலும் பா.ஜ.க வேட்பாளர்கள் தோற்கடிக்கப்பட்டிருப்பது, கோவில்கள் வாக்குச்சாவடிக்கான வாசல் அல்ல என மக்கள் தெளிவுபடுத்தியுள்ளதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்  சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

Advertisment

கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் (PSG) தொழில்நுட்ப கல்லூரியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் இலக்கிய சந்திப்பு நிகழ்ச்சி இலச்சினை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம், எழுத்தாளர் தமிழ்செல்வன் உள்ளிட்ட எழுத்தாளர்கள் கவிஞர்கள் பலர் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எம்.பி., சு.வெங்கடேசன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மகத்தான படைப்பாளி சா.தமிழ்செல்வன் தொடர்பான படைப்பு உலகம் பற்றி முழு நாள் கருத்தரங்கம் கோவையில் நடைபெறுகிறது. தமிழகத்தின் த.மு.எ.க.ச பண்பாட்டு வரலாற்றில் பொன்விழாவில் காலடி எடுத்து வைத்துள்ளது. அவற்றின் லட்சினையை வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் சி.பி.எஸ்.இ., வேலை வாய்ப்பு தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஹிந்தி மொழி பாடத்திற்கு 10% மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டு விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டுள்ளது. ஹிந்தி அல்லாத மாநில மாணவர்கள் அந்த தேர்வை எழுதினால் எடுத்தவுடன் 10% மதிப்பெண்களை இழப்பார்கள், இது ஹிந்தி அல்லாத மாணவர்களுக்கு மிகப்பெரிய அநீதியாகும். இந்திய ஆட்சி மொழி சட்டத்திற்கு எதிரான அறிவிப்பு. மத்திய அரசின் கல்வி அமைச்சருக்கு இந்த அறிவிப்பை திரும்பப்பெறவும், தேர்வின் விதிமுறைகள் மாற்றியமைக்க வேண்டும் எனவும் கடிதம் எழுதியுள்ளேன். உடனடியாக இந்த அநீதி களையப்பட வேண்டும். ஹிந்தி அல்லாத குறிப்பாக தென் மாநிலங்கள், தமிழக மாணவர்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

இந்த தேர்தல் முடிவிலும் எந்த பாடத்தையும் பா.ஜ.க கற்றுக் கொள்ளவில்லையோ என்ற ஐயத்தை தான் இந்த 15 நாட்களில் பார்க்கிறோம், சபாநாயகர் தேர்விலும், முதலில் துணை சபாநாயகர் பொறுப்பை எதிர்க்கட்சிக்கு வழங்கப்படுவது போன்ற சூழலை ஏற்படுத்தி விட்டு, மீண்டும் எதிர்க்கட்சியுடன் எந்த வித பேச்சுவார்த்தையும் நடத்தாமல் வேட்பாளரை அறிவித்தது என்பதும், நாடாளுமன்ற நிகழ்வுகள் உள்ளிட்ட ஏற்கனவே என்ன நடைமுறைகளை பின்பற்றுகிறோமோ, அதில் எந்த மாற்றமும் செய்யப்போவதில்லை என்பதை போல தான் நடவடிக்கைகள் உள்ளது. 

இந்த தேர்தலில் இந்திய மக்கள் கடுமையான எதிர்வினையை கொடுத்துள்ளனர், அயோத்தி, சித்ரகூடம் ஆகிய பகுதிகளில் பா.ஜ.க.,விற்கு பாடம் புகட்டியுள்ளனர். ராமர் பிறந்த இடம் அயோத்தி, ராமர் அதிகமாக வனவாசம் செய்த, இந்தியாவில் ராமர் சிலைகள் அதிகமாக இருக்கும் இடமான சித்ரகூடம் பகுதியிலும் பா.ஜ.க வேட்பாளர்கள் தோற்கடிக்கப்பட்டு உள்ளனர். கோவில்கள் ஆன்மீக தளத்திற்கான தளம், வாக்குச்சாவடிக்கான வாசல் அல்ல என சொல்லியுள்ளனர். உண்மையான மக்கள் பிரச்னைக்கு முகம் கொடுத்து, ஒரு நல்லாட்சியை உருவாக்குங்கள் என்பது தான் மக்கள் தீர்ப்பு. ஆனால் மீண்டும் மீண்டும் கடந்த கால பழைய பாணியை தொடர்வதை தான் காட்டுகிறது.

எதிர்க்கட்சியின் குரல், ஜனநாயகத்தின் குரல், சட்ட மரபுகள் காப்பாற்றப்பட வேண்டும், ஆனால் பா.ஜ.க.,வால் தொடர்ந்து சிதைக்கப்பட்டு வருகிறது. அதில் ஒன்றான 3 புதிய சிறப்பு சட்டங்கள், அதில் அமல்படுத்த வேண்டிய விஷயங்களில் கூட நீதிமன்றத்தின் குரலோ, வழக்கறிஞர்கள் குரலோ, மக்களின் குரலோ கேட்கப்படாமல், பாராளுமன்றத்தில் சட்டங்களின் மாற்றம் செய்யக்கூடிய விஷயத்தில், தொடர்ந்து 150க்கும் மேற்பட்ட எம்.பி.,க்கள் இடை நீக்கம் செய்யப்பட்ட காலத்தில், எந்த விவாதம் இல்லாமல் 140 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டின் குற்றவியல் சட்டங்களை மாற்றுவது என்பது முற்றிலும் ஜனநாயகத்திற்கு எதிரான செயல். அதை திரும்பப்பெற வேண்டும் என்று நாட்டில் அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்கறிஞர்கள் போராடி வருகின்றனர். அதை அரசு திரும்பப்பெற வேண்டும். 

இந்த கூட்டத்தில் கூட மதுரையிலிருந்து கோவைக்கு பகல் நேரத்திலான புதிய ரயில்கள் இயக்கப்படவில்லை, 10 ஆண்டுகளாக அகல ரயில் பாதை உருவாக்கப்பட்ட பின்பும் ரயில்கள் இயக்கப்படவில்லை. ரயில் பாதைகள், நான்கு வழிச்சாலை பணிகளாக இருந்தாலும், வட மாநிலங்களை ஒப்பிடுகையில் மிக மிக பின்தங்கிய மாநிலங்களாக தென் மாநிலங்கள், குறிப்பாக தமிழகம் உள்ளது. உத்தரப்பிரதேசம், பீகார் ஆகிய வட மாநிலங்களில் கடந்த 10 ஆண்டுகளில் நான்கு வழிச்சாலைகளுக்கு ஒதுக்கப்பட்ட முதலீடுகளில் 5ல் ஒரு பங்கு தான் மத்திய அரசால் தமிழகத்திற்கு செய்யப்பட்டுள்ளது. அந்த முதலீட்டு அளவுகள் நேர் செய்யப்பட வேண்டும். தமிழ்நாட்டிற்கான அனைத்து வகைகளிலும் குறிப்பாக ரயில் சேவை, கட்டுமான துறையில் முதலீடுகள் அதிகரிக்க வேண்டும்.

கடந்த முறை ஜே.பி.நட்டா சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது மதுரைக்கு எய்ம்ஸ் அறிவிக்கப்பட்டது, அதன் பின் பா.ஜ.க.,வின் தலைவராகி முழு பொறுப்பை முடித்துவிட்டு, இப்போது மீண்டும் சுகாதாரத்துறை அமைச்சராகி உள்ளார். அவர் எந்த புள்ளியில் ஆரம்பித்தாரோ அதே புள்ளியில் தான் எய்ம்ஸ் பணிகள் உள்ளது. இந்த நிதிநிலை அறிக்கையில் ஆவது முழு நிதி ஒதுக்கப்பட வேண்டும். 

தமிழகத்திற்கு முழு நிதிகளை இந்த நிதிநிலை அறிக்கையில் ஒதுக்க வேண்டும். கார்ப்ரேட்களுக்கான சலுகைகள் குறைக்கப்பட வேண்டும். செல்வ வரி அதிகரிக்க வேண்டும், கார்ப்ரேட் வரிகள் அதிகரிக்க வேண்டும். ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படும் கொள்கைகளை, குறிப்பாக வணிகர்கள் பாதிக்கும் ஜி.எஸ்.டி., என்ற பெயரில் நிகழ்ந்து கொண்டிருக்கிற வரி பயங்கரவாதத்தில் இருந்து காப்பாற்றப்பட வேண்டும். இவ்வாறு சு.வெங்கடேசன் தெரிவித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Su. Venkatesan kovai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment