/indian-express-tamil/media/media_files/2025/01/12/FVHA8lndGtCXHXxF65Ew.jpg)
மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர்களுக்கு நடத்தப்படும் தேர்வுகள் பொங்கல் பண்டிகை நாட்களில் வைக்கக் கூடாது. தேதியை மாற்ற வேண்டுமென கேந்திரி வித்யாலயா மண்டல துணைத் தலைவருக்கு கடிதம் எழுதி இருப்பதாக தனது எக்ஸ் தளத்தில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்
இதுதொடர்பாக, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து இருப்பதாவது;
”கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பொங்கல் விழா நாட்களில் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது மாணவர்களுக்கு திருவிழா கால விடுமுறையை கொண்டாட முடியாத உளவியல் தாக்குதலையும், தமிழ் பண்பாட்டின் மீதான ஒவ்வாமையையும் ஒருசேர வெளிப்படுத்தும் செயல். எனவே இந்த தேர்வுகள் அனைத்தையும் மறு தேதிக்கு மாற்றுக.
பொங்கல் விடுமுறையில் நடைபெறும் கேந்திரிய வித்யாலயா தேர்வுகளை வேறு தேதிகளுக்கு மாற்றுமாறு கடிதம் எழுதியுள்ளேன்.
சென்னை, மதுரை, திருச்சி பள்ளிகளில் பொங்கல் விடுமுறை நாட்களில் ஜனவரி 13, 16, 17, 18 தேதிகளில் 6 ஆம் முதல் 11 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பொங்கல் அறுவடைத் திருநாள் மட்டுமல்ல, தமிழ் மக்களின் பண்பாட்டுடன் இணைந்தது. தமிழ்நாடு அரசு ஜனவரி 14 முதல் 18 வரை விடுமுறை அறிவித்துள்ளது.
கேந்திரிய வித்யாலயா குழந்தைகள் மட்டும் பொங்கல் விடுமுறையின் மகிழ்ச்சியை அனுபவிக்க முடியாமல் போய் விடக் கூடாது. இது மாணவர்களை உளவியல் ரீதியாக பாதிக்க கூடும்.
ஆகவே தேர்வுத் தேதிகளை மாற்றி பொங்கல் விடுமுறைக்கு பின்னர் நடத்துமாறு வலியுறுத்தி கேந்திரிய வித்யாலயா மண்டல துணை ஆணையாளர் திரு டி மணிவண்ணன் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன்.” இவ்வாறு சு.வெங்கடேசன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.