போலி ஆவணங்கள் மூலம் இலங்கை அகதிகளுக்கு பாஸ்போர்ட் வழங்கிய வழக்கில் காவல் உதவி ஆணையர், மத்திய பாஸ்போர்ட் அதிகாரிகள், தபால் துறை அலுவலர்கள் உள்பட 39 பேர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகினர். கடந்த 2019-ம் ஆண்டு மதுரை அவனியாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 53 பேருக்கு போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் வழங்கிய விவகாரம் தொடர்பாக மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
அதில், "53 பேருக்கு போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் வழங்கப்பட்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், கியூ பிரிவு போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை" எனக் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது போலி ஆவணம் மூலம் பாஸ்போர்ட் வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாக அரசு தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கை கீழமை நீதிமன்றம் மூலமாக விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.
இந்நிலையில் மதுரை மாவட்ட 4-வது நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி பாக்யராஜ் முன்பாக நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் குற்றச்சாட்டப்பட்டுள்ள உதவி ஆணையர் சிவக்குமார், ஆய்வாளர் இளவரசன், மத்திய பாஸ்போர்ட் அதிகாரிகள், தபால் துறை அதிகாரிகள், போலியாக பாஸ்போர்ட் பெற்ற 20 பேர் என மொத்தம் 39 பேர் நேரில் ஆஜராகினர். இதையடுத்து
39 பேரிடமும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. பின்னர் வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை அக்டோபர் 28-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி கூறி உத்தரவிட்டார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil