திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் அறவழி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அறிவித்ததால், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனக் கருதி மதுரை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட் கிளை, பழங்காநத்தம் பகுதியில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கியது. இதனை தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் எச். ராஜா, மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன், இந்து முன்னணி மாநில அமைப்பாளர் ராஜேஸ், மாநில செயலாளர் சேவுகன், புதுச்சேரி மாநில தலைவர் குமார், ஆர்.எஸ்.எஸ். தென் பாரத அமைப்பாளர் வன்னியராஜன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய பா.ஜ.க. மூத்த தலைவர் எச். ராஜா, மதங்களுக்கு இடையேயான மோதலை தூண்டும் வகையில் கருத்து தெரிவித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து, சுப்பிரமணியபுரம் காவல்துறை எச்.ராஜா மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.