New Update
/indian-express-tamil/media/media_files/2025/07/06/mdu-police-issue-2025-07-06-17-13-56.jpg)
மதுரையில், தந்தை மீது அளிக்கப்பட்ட புகாருக்காக அவரது மகன்களை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பான வீடியோ வெளியாகி இருக்கிறது.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில், தந்தை மீதான புகார் தொடர்பாக அவரது மகன்களை காவலர்கள் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்த காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அலங்காநல்லூரைச் சேர்ந்த வெள்ளையம்மாள் என்பவரின் மருமகன் ஆண்டிச்சாமி. வெள்ளையம்மாளுக்கு தர்மராஜ் மற்றும் யுவராஜ் என இரு பேரன்கள் உள்ளனர். தனது மகளின் திருமணத்திற்காக ஆண்டிச்சாமி, வெள்ளையம்மாளிடம் நகையைப் பெற்று அடமானம் வைத்துள்ளார். பின்னர் அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தில், வெள்ளையம்மாள் தனது நகையைத் திருப்பித் தருமாறு கேட்டுள்ளார்.
ஆனால், ஆண்டிச்சாமி நகையைத் திருப்பித் தராததால், வெள்ளையம்மாள் அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில், நகையை விரைவில் திருப்பித் தருவதாக ஆண்டிச்சாமி கூறியிருந்த நிலையில், நகை திரும்ப வராத காரணத்தினால் வெள்ளையம்மாள் மீண்டும் அலங்காநல்லூர் காவல் நிலையத்தை அணுகியுள்ளார்.
அப்போது, காவலர்கள் ஆண்டிச்சாமியைத் தொடர்பு கொள்ள முடியாத நிலையில், அவரது மகன்களான தர்மராஜ் மற்றும் யுவராஜை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர். அவர்களிடம் தந்தையின் தொலைபேசி எண்ணைக் கேட்டதாகவும், அவர் எங்கு இருக்கிறார் என்று விசாரித்ததாகவும் தெரிகிறது. குறிப்பாக, "நீ வந்தால் உங்க அப்பா இங்க வருவார்" என்று கூறி காவலர்கள் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாக குற்றம் சாட்டப்படுகிறது.
இந்த சம்பவம் கடந்த 24.05.2025 அன்று நடந்த நிலையில், தற்போது இதன் காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.