/indian-express-tamil/media/media_files/axgKSrlJsyS3a2yY6R63.jpg)
மதுரை நகரில் குற்றச் சம்பங்களை தடுக்கவும், போலீசார்-பொது மக்கள் இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும், காவல் துறை சார்பில் 100 வார்டுகளில் கட்செவி அஞ்சல் (வாட்ஸ் ஆப்) குழுக்கள் தொடங்கப்பட்டிருப்பதாக காவல் ஆணையர் ஜெ.லோகநாதன் தெரிவித்தார்.
மதுரை மாநகரக் காவல் துறை சார்பில் காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் முகாமுக்கு காவல் ஆணையர் ஜெ.லோகநாதன் தலைமை வகித்து மனுக்களைப் பெற்றார். மேலும், மதுரை மாநகரக் காவல் துறை சார்பில், 100 வார்டுகளில் தொடங்கப்பட்ட குழுக்களின் செயல்பாடுகளையும் அவர் தொடங்கி வைத்தார்.
பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, மதுரை நகரில் காவல் துறை, பொதுமக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும், குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையிலும் மாநகரக் காவல் துறை சார்பில் 100 வார்டுகளிலும் கட்செவி அஞ்சல் குழுக்கள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்தக் குழுக்களில் அந்தந்த காவல் நிலைய ஆய்வாளர்கள் குழுநிர்வாகிகளாக இருப்பதுடன் வார்டில் உள்ள குடியிருப்போர் சங்க நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள், கிராம நிர்வாக அதிகாரி கள், மக்கள் பிரதிநிதிகள், பள்ளித்தலைமையாசிரியர்கள், உதவி ஆய்வாளர்கள், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் உள்பட 250 பேர் உறுப்பினர்களாக இருப்பர்.
வார்டில் நடைபெறும் சட்ட விரோத செயல்கள், சந்தேகத்துக்குரியவர்களின் நடமாட்டம், கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை, குட்கா புகையிலைப் பொருள்களின் விற்பனை ஆகியவை குறித்து இந்த கட்செவி அஞ்சல் செயலியில் தகவல் அளிக்கலாம்.
இதன் பேரில் தாமதமின்றி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். குற்றச் சம்பவங்கள் தொடர்பாக தகவல் அளிப்பவர்கள் குறித்து ரகசியம் காக்கப்படும். 100 வார்டுகளிலும் இயங்கும் இந்தக் குழுக்களின் செயல்பாடுகளை மாநகரக் காவல் துறை கண்காணிக்கும். மேலும் பொதுமக்கள் ஏதேனும் ரகசியதகவல்கள் அளிக்க வேண்டு மெனில் காவல் ஆய்வாளர்களின் கைப்பேசி எண்ணுக்கு தனியாக தகவல்கள் அனுப்பலாம்.
இந்தக் குழுக்களில் ஆபாசமான தகவல்கள், தவறான தகவல்கள், வதந்திகள், ஜாதி, மத, இன வேறுபாட்டை தூண்டும் செய்திகள், மோதல்களை உருவாக்கும் தகவல்களை பதிவிடக் கூடாது. அவ்வாறு பதிவிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற முகாமில் 236 மனுக்கள் பெறப்பட்டன. முகாமில் காவல் துணை ஆணையர்கள் கரண் காரட் மதுகுமாரி, வனிதா, ராஜேஸ்வரி, உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள் உள்படபலர் பங்கேற்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.