ஜூன் 22ஆம் தேதி இந்து முன்னணி சார்பில் நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாடுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுரையில் இன்று மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
மாநகரின் முக்கிய பகுதியில் நடைபெற்ற இந்த மனித சங்கிலியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் மக்கள் அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.
மனித சங்கிலி நிகழ்வின் போது, "முருக பக்தர்கள் மாநாடு என்ற பெயரில் பாஜக-ஆர்எஸ்எஸ் அரசியல் செய்ய முயல்கின்றன. மதகலவரத்தை தூண்டும் வகையில் இந்நிகழ்வு அமைந்துள்ளது. எனவே, இதற்கான அரசு அனுமதியை திரும்ப பெற வேண்டும்" என கோஷங்கள் எழுப்பப்பட்டன.
போராட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்கள், “மதுரை ஒரு மதசார்பற்ற நகரம். இங்கு எந்தவிதமான மதவாத நிகழ்வுகளும் ஏற்படக் கூடாது” என்ற வலியுறுத்தலையும் தெரிவித்தனர்.
மாநாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டிருப்பது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் முறையீடு செய்யப்படும் என்றும், தேவையானால் சட்டவழியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் கூறினர்.