மதுரை மாவட்டம் கடச்சனேந்தல் ஹரிணி ஆறுமுகம் நகர் இரண்டாவது தெருவை சேர்ந்தவார் ரமேஷ் தங்கராஜ். இவர் புதூர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், ரமேஷ் தங்கராஜ் மற்றும் அவரது மனைவி பிரேமலதா ஆகிய இருவரும் குயின் டிரேடிங் என்ற பெயரில் பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் இருமடங்கு லாபம் தருவதாக கூறி தங்கும் விடுதி ஒன்றில் கூட்டம் நடத்தியுள்ளனர்
இதில் தமிழகம், கேரளா,கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட நபர்களிடம் குறைந்தபட்சம் தலா 5 லட்சம் முதலாக 20 லட்சம் வரை முதலீடு பெற்றுள்ளனர். மேலும் மதுரை, கோயம்புத்தூர், சேலம், திருச்சி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் இவர்களை நம்பி முதலீடு செய்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த 3 மாதங்களான முதலீட்டிற்கான லாப தொகையினை வழங்கியுள்ளனர் இதனையடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் லாபம் இல்லாத நிலையில், பணத்தை திரும்ப ஒப்படைப்பதாக இருவரும் கூறியுள்ளனர். தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்கள் பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் இருவரையும் தொடர்பு கொள்ள முயன்றுள்ளனர். அப்போது செல்போனில் தொடர்பு கொள்ள இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக பாதிக்கப்பட்ட முதலீட்டார்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம், மாநகர காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் பொருளாதார குற்றப்பிரிவிலும் புகார் அளித்துள்ளனர். ஆனால் இதுவரையும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஒவ்வொருவரும் கிட்டத்தட்ட 20 லட்சம் ரூபாய் வரையும் ஏமாற்றமடைந்ததாக தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுத்து தங்களுடைய பணத்தை மீட்டு தர வேண்டும் என கூறி மீண்டும் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதலீட்டாளர்கள், "ரமேஷ் புதூர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்ததால் அவரை நம்பி பணம் செலுத்தினோம்.
ஆனால் அவரும் அவரது மனைவியும் சேர்ந்து எங்களை ஏமாற்றி விட்டார்கள். எனவே எங்களுடைய பணம் கிடைப்பதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் முதலீட்டாளர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்று அவர்கள் கூறினர்.