மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, தி.மு.க பொதுக்குழு மற்றும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார். இது தொடர்பாக அவர் பேசுகையில், “முதல்வர் மதுரைக்கு வந்து எந்த நலத்திட்டங்களையும் அறிவிக்கவில்லை. தி.மு.க கூறும் போல லட்சக்கணக்கானோர் தன்னிச்சையாக கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. 30-40 ஆயிரம் பேர் மட்டுமே வந்தனர். அவர்களில் பாதி கூட்டத்தை மத்தியிலும் விட்டு சென்றுவிட்டனர். இது மக்கள் கூட்டமல்ல, அழைத்து வரப்பட்ட கூட்டமென்றே கொள்ளலாம்.
ரோடு ஷோவும், பொதுக்குழுவும் முடிந்துவிட்ட நிலையில் கூட, பாதுகாப்பு கட்டமைப்புகள் அகற்றப்படவில்லை. பொதுமக்கள் 3 மணி நேரம் போக்குவரத்து தடை காரணமாக சிரமப்பட்டனர். முதல்வர் தொகுதிக்கு ஒரு கோரிக்கைகள் கேட்கலாம், நாங்களும் அளித்தோம். ஆனால் எதையும் நிறைவேற்றவில்லை. மதுரையை கைப்பற்ற திமுக விரும்பலாம். ஆனால் மக்கள் விரும்பவில்லை. உண்மையில் விரும்பியிருந்தால், கூட்டம் இன்னொரு சித்திரைத் திருவிழாவாக இருந்திருக்கும்.
அ.தி.மு.க ஆட்சியில் மதுரைக்காக மேற்கொண்ட நலத்திட்டங்களை பட்டியலிட நான் தயார். தி.மு.க தயார் என்றால் பொது விவாதத்திற்கு வாருங்கள். பந்தல்குடி கால்வாய் திட்டம் கைவிடப்பட்டதைப் பொறுத்தவரை, இஸ்லாமியர் மற்றும் பட்டியலின மக்கள் வசிக்கும் அந்த பகுதியில் ரூ.2.25 கோடி மதிப்பீட்டில் திட்டம் வகுத்தோம். ஆனால் ஆட்சி மாறியவுடன் தி.மு.க அதை கைவிட்டது. தி.மு.க 1977ல் மதுரையில் பொதுக்குழு நடத்தி, 12 ஆண்டுகள் வனவாசம் சென்றது. இப்போது மீண்டும் அதையே போல் அமைந்துள்ளது. யாரோ முதல்வரை ஏமாற்றி இங்கு கூட்டம் நடத்த வைத்திருக்கிறார்கள். இது தி.மு.க-வுக்கே சூனியமாக முடிந்துள்ளது. மீண்டும் வனவாசம் செல்லப்போகிறார்கள்” என்று அவர் கூறினார்.