/indian-express-tamil/media/media_files/2025/08/18/madurai-tamilaga-vettri-kazhagam-second-state-level-conference-parappatty-drones-for-medical-help-tamil-news-2025-08-18-11-27-45.jpg)
மதுரை த.வெ.க மாநாட்டில் பங்கேற்கும் தொண்டர்களுக்கு உடனடி மருத்துவ உதவி வழங்கும் நோக்கில் டிரோன் மருத்துவ சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) 2-வது மாநில மாநாடு வரும் 21-ந்தேதி மதுரையில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. கட்சித் தலைவர் விஜய் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டை முன்னிட்டு மாநாட்டு திடலில் பணிகள் இரவு பகலாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சுமார் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தினமும் பந்தல் அமைப்பு, மேடை அலங்காரம், தொண்டர்களுக்கான வசதிகள் ஏற்பாடு போன்ற பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த மாநாட்டிற்கு வரவிருக்கும் தொண்டர்களுக்காக குடிநீர், பாதுகாப்பு, வாகன நிறுத்தம், சுகாதார வசதிகள், மருத்துவ வசதிகள் என அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க மாநாட்டு திடலின் பல்வேறு இடங்களில் 100-க்கும் மேற்பட்ட குடிநீர் தொட்டிகள் வைக்கப்பட உள்ளன. மேலும் பூமிக்கடியில் குழாய்கள் பதித்து குடிநீர் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதோடு விஜய் படம் பொறிக்கப்பட்ட 5 லட்சம் குடிநீர் பாட்டில்களும் தயார் நிலையில் உள்ளன.
இந்த மாநாட்டில் சுமார் 20 லட்சம் தொண்டர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுக்காக மருத்துவ சேவையில் சுமார் 400 மருத்துவர்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் ஈடுபடவுள்ளனர். அவசர நிலைகளுக்கு ஆம்புலன்ஸ் வசதிகளும் திடலின் சுற்றுவட்டாரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சிறப்பம்சமாக, மாநாட்டில் பங்கேற்கும் தொண்டர்களுக்கு உடனடி மருத்துவ உதவி வழங்கும் நோக்கில் டிரோன் மருத்துவ சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சிறிய கார் வடிவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த டிரோனில் 25 கிலோ வரை மருந்துப் பொருட்கள் ஏற்றிச் செல்லும் வசதி உள்ளது. கூட்டத்தின் நடுவே யாரேனும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டால் டிரோன் மின்னல் வேகத்தில் பறந்து சென்று அவசியமான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை கொண்டு சென்று சிகிச்சை வழங்கும்.
இந்த டிரோன் மருத்துவ சேவைக்கான சோதனை ஓட்டம் இன்று காலை மாநாட்டு பந்தலில் நடைபெற்றது. அந்த சோதனை ஓட்டத்தை கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் நேரில் பார்வையிட்டார். மாநாட்டிற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், மாநாட்டு பந்தல் மின்னொளியில் ஜொலிக்கத் தொடங்கியுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பந்தலை சுற்றுலா தலம்போல ஆர்வத்துடன் வந்து பார்வையிட்டு, செல்பி எடுத்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.