வழக்கத்திற்கு மாறாக இந்த முறை பா.ஜ.க. முந்திக் கொண்டிருக்கிறது. ஞாயிற்றுக் கிழமை மதுரை வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பாளர்கள் ‘கோ பேக்’ சொல்லும் முன்பாக, ‘மதுரை தேங்ஸ் மோடி’ என ட்விட்டரில் டிரெண்டிங் செய்திருக்கிறார்கள் பாஜக அபிமானிகள்.
பிரதமர் நரேந்திர மோடி கஜ புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்க்கவில்லை என புகார் இருக்கிறது. இந்த அடிப்படையிலும், தமிழகத்தை மத்திய அரசு பல்வேறு வகைகளில் வஞ்சிப்பதாக கூறியும் பிரதமர் நரேந்திர மோடிக்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
பா.ஜ.க.வினர், 'Madurai Thanks Modi' என்கிற வாசகத்தை ட்ரெண்ட் செய்திருக்கிறார்கள்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட ஞாயிற்றுக் கிழமை (டிசம்பர் 27) வருகை தரும் மோடிக்கு கருப்புக் கொடி காட்டப்படும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் அறிவித்திருக்கிறார்கள்.
இதற்கு முன்பு சென்னை அருகே ராணுவ தளவாட உற்பத்தி கண்காட்சி நிகழ்ச்சிக்கு மோடி வந்தபோதும் கருப்புக் கொடி போராட்டங்களை நடத்தியதுடன், ‘கோ பேக் மோடி’ என்கிற வாசகத்தை எதிர்ப்பாளர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆக்கினர். இந்த முறையும் அதேபோல ட்விட்டர் ஆயுதத்தை எதிர்ப்பாளர்கள் கையில் எடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் அவர்களுக்கு முன்பாக பா.ஜ.க.வினர், ‘மதுரை தேங்க்ஸ் மோடி’ என்கிற வாசகத்தை ஆங்கிலத்தில் ட்ரெண்ட் செய்திருக்கிறார்கள். சென்னை டிரெண்டிங்கில் இது முதலிடத்தைப் பிடித்தது. பாஜக தமிழக பொறுப்பாளர் முரளிதர்ராவ், மாநில தலைவர் தமிழிசை உள்ளிட்ட முக்கிய தலைவர்களே மேற்படி ஹேஸ்டேக்குடன் ட்விட்டரில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வழங்கிய மோடிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்வதாக பா.ஜ.க.வினர் கூறுகின்றனர்.
இதற்கிடையே மாலையில் மோடி எதிர்ப்பாளர்கள், ‘கோ பேக் மோடி’ ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்தார்கள். காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பூவும் தன் பங்கிற்கு இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி ட்வீட் செய்தார்.