சக்தி சரவணன் - மதுரை
தமிழ்நாட்டின் புதிய போராட்டக்களமாக மாறியிருக்கிறது மதுரை அருகே அமைந்திருக்கும் அரிட்டாபட்டி. கனிம வள சுரண்டலுக்கு எதிராகவும், இயற்கை வளங்களை அழித்து விட்டு, அதன் மேல் புதிய ஏர்போட், தொழிற்சாலைகள் மற்றும் கட்டமைப்புகளை உருவாக்குவதற்கும் எதிராக என தமிழகத்தில் அன்றாட போராட்டங்களுக்கும், மறியல்களும், ஆர்ப்பாட்டங்களும் அரங்கேறிய வண்ணம் இருக்கிறது.
இந்த சூழலில் தான், இயற்கை அழகு கொஞ்சிக் குழவும் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைய இருப்பதாக வெளிவந்துள்ள தகவல், அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை கொண்டுவந்துள்ளது. அதற்கு எதிராகவும் போராட்டக் களத்தில் குதிக்க தயாராகியும் வருகிறார்கள்.
/indian-express-tamil/media/post_attachments/129e8dd8-22e.jpg)
அரிட்டாப்பட்டியில் அமைய உள்ள சுரங்கத்திற்கு எதிராக கிராம மக்கள் தீர்மானம் நிறைவேற்றினர்.
அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம்
கடந்த நவம்பர் 7 ஆம் தேதி சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ், மத்திய அரசின் கீழ் இயங்கும் கனிமம் மற்றும் சுரங்கம் அமைச்சகம் நடத்தப்பட்ட 4-வது ஏலத்தில் ஸ்டெர்லைட் வேதாந்தா துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனம் டங்ஸ்டன் கனிமத்தை எடுக்கும் உரிமத்தைப் பெற்றுள்ளது. இதன்படி ஆந்திரா மாநிலம் பாலே பாளையம் மற்றும் தமிழ்நாட்டில் மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் கனிமம் எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியது.
அரிட்டாபட்டி மலை அருகே அமைந்துள்ள மரங்களுடன் கூடிய இயற்கை காட்சி.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள அப்பகுதி மக்கள் மத்திய அரசின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் எனவும், தெற்கு தெரு, முத்துவேல்பட்டி, மீனாட்சி புரம், நடுவளவு, தெற்கு வளவு, சண்முகநாதபுரம், அ.வல்லாளப்பட்டி, கூலானிப்பட்டி, கிடாரிப்பட்டி, எட்டி மங்கலம், செட்டியார்பட்டி, நாயக்கர்பட்டி போன்ற கிராமங்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளதால் சுற்றுசூழல் அனுமதி கேட்டு, மாநில அரசிடம் அந்த நிறுவனம் விண்ணப்பித்தால் தமிழ்நாடு அரசு தாமதமின்றி நிராகரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.
அரிட்டாபட்டி செல்லும் வழியில் அமைந்துள்ள யானைமலை.
இதனிடையே, தமிழ்நாட்டின் சிறந்த பல்லுயிர் வாழிடப்பகுதிகளில் ஒன்றான அரிட்டாபட்டியை சீரழிக்கும் வகையிலான இந்த திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று குறிப்பிட்டு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
'அழகு பூமி' அரிட்டாபட்டி இப்போ எப்படி இருக்கு?
மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவில் அமைந்திருக்கும் குக் கிராமம் தான் அரிட்டாபட்டி. மண் வளத்தாலும், மலை வளத்தாலும் ஆசிர்வதிக்கப்பட்ட இந்தப் பகுதியின் முக்கிய தொழிலாக விவசாயம் இருக்கிறது. அதில் நெல் முக்கியப் பயிராக இருக்கிறது.
அரிட்டாபட்டி குன்றுகளுக்கு இடையே அமைந்துள்ள குளம்.
கி.பி 7-8 ஆம் நூற்றாண்டில் முற்கால பாண்டியர் வடிவமைத்த குடைவரை சிவன் கோவில், இரண்டாயிரம் ஆண்டுக்கு முந்தைய சமணர் படுகைகள் என சிறப்பு வாய்ந்த தலமாக அரிட்டாபட்டி இருக்கிறது. இக் கிராமத்தைச் சுற்றி 7 மலைகளில் அமைந்துள்ளன. இந்த மலைகளை சுற்றி வற்றாத நீரூற்றுகளும், நூற்றுக்கும் மேற்பட்ட நீர் நிலைகளும், 1,200 வகையான மீன் இனங்களும், 600 வகையான பூச்சி இனங்களும், 300 க்கும் மேற்பட்ட அரிய பறவை மற்றும் விலங்கினங்களும் வாழ்ந்துள்ளன.
/indian-express-tamil/media/post_attachments/484313ee-4c3.jpg)
அரிட்டாபட்டி மலை மேல் லகுலீசர் குடைவரை சிவன் கோயில். இது கி.பி 7ம் 8 ம் நூற்றாண்டில் முற்பகுதியில் பாண்டியர் அமைத்த கோயில்.
இதில் பல அரிய உயிரினங்கள் காலப்போக்கில், சமூக விரோதிகளின் பல்வேறு நடவடிக்கைகளால் அழிந்து விட்டன. இதேபோல், ராசாளி கழுகு உட்பட அரியவகை பறவைகளும் இங்கு வசித்து வருகின்றன. இவைகளை தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
தற்போது இந்தப் பகுதியில் 72 ஏரிகள், 200 இயற்கை நீரூற்று குளங்களும் உள்ளன. மேற்கண்ட குளம், ஏரி மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதியானது 2200 ஆண்டுகள் பழமையான தமிழி எழுத்து கல்வெட்டுகள், சமணர் படுகைகள், குடைவரை கோயில்கள் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களும் உள்ள பகுதியாக உள்ளது .இதன் காரணமாகவே இந்த இடம் பல்லுயிர் சூழல் மண்டலமாக அடையாளம் காணப்பட்டு, அறிவிக்கப்பட்டது.
தொல்லியல்துறை சார்பில் தமிழிக் கல்வெட்டுகள் மற்றும் திருத்தங்கர சிற்பம் செல்வதற்கான வழிகாட்டி பலகை.
எனினும், அதற்கான அரசாணை வெளியிடப்படாமல் இருந்தது. 2020 இல் அறிவிக்கப்பட்டாலும் அரசாணை வெளியாவதில் தாமதம் இருந்ததால் உடனடியாக அரசாணையை வெளியிட வேண்டும் என தமிழக அரசுக்கு இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து, 2022 ஆம் ஆண்டு அரிட்டாபட்டி, மீனாட்சிபுரத்தை உள்ளடக்கிய 193.215 ஹெக்டேர் பகுதியை பாரம்பரிய உயிர்ப்பன்மையம் வாய்ந்த பகுதியாக தமிழ்நாடு அரசு அறிவித்து அரசாணை வெளியிட்டது.
படங்கள்: சக்தி சரவணன் - மதுரை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“