உசிலம்பட்டி காவலர் படுகொலை வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகளில் ஒருவர் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள நாவார்பட்டியில் நேற்று முன்தினம் (மார்ச் 27) முத்துக்குமார் என்ற காவலர், கஞ்சா வழக்கில் தொடர்புடைய சிலரால் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் அங்குள்ள வனப்பகுதிகளில் பதுங்கியிருப்பதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில், ஆண்டிபட்டி தாலுகாவிற்கு உட்பட்ட வருசநாடு வனப்பகுதிகளில் நேற்று (மார்ச் 28) முழுவதும் திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி வந்திதா பாண்டே தலைமையிலான போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்த சூழலில், காவலர் படுகொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளில் சிலர், தமிழக - கேரள எல்லையான கம்பம் அருகே உள்ள கம்பம் மெட்டு மலைச் சாலையில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு கூடுதல் தகவல் கிடைத்தது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அவர்களை சுற்றி வளைத்தனர்.
அப்போது, பொன்வண்ணன் என்ற நபர் தப்பியோட முயன்றதாக கூறப்படும் நிலையில், அவர் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் பலத்த காயமடைந்த பொன்வண்ணனை, முதலுதவி அளிப்பதற்காக கம்பம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதன் பின்னர், அவருக்கு மேல் சிகிச்சை அளிப்பதற்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில், பொன்வண்ணனை பிடிக்க முயன்ற காவலர் சுந்தரபாண்டி என்பவர் காயமடைந்தார். அவருக்கு கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரை, திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி வந்திதா பாண்டே நேரில் சென்று நலம் விசாரித்தார். இந்நிலையில், துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தேனி மாவட்ட காவல்துறை தரப்பில் இருந்து தற்போது வரை விளக்கம் அளிக்கப்படவில்லை.
முன்னதாக படுகொலை செய்யப்பட்ட காவலர் முத்துக்குமாரின் குடும்பத்தினருக்கு தி.மு.க சார்பில் ரூ. 5 லட்சமும், அரசின் நிவாரண நிதி மற்றும் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என்றும் தி.மு.க நிர்வாகிகள் உறுதியளித்தனர். அதன்பேரில், முத்துக்குமாரின் சடலத்தை அவரது குடும்பத்தினர் பெற்றுக் கொண்டனர்.
இதைத் தொடர்ந்து, உசிலம்பட்டி அரசு மருத்துவமனையிலிருந்து முத்துக்குமாரின் சொந்த ஊரான கள்ளப்பட்டிக்கு அவரது சடலம் எடுத்துக் செல்லப்பட்டது. அங்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவரது சடலத்திற்கு எரியூட்டப்பட்டது.